மும்பை : இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி அதிரடியாக தன்னை ஒருநாள் போட்டி அணி மற்றும் டி20 அணியில் தான் சொல்லும் வரை தேர்வு செய்ய வேண்டாம் என பிசிசிஐ-இடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்? என்பதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என கூறப்படும் நிலையில் அவர் தொடர்ந்து டி20 போட்டிகளில் இருந்து தானாகவே விலகி வருகிறார்.

ஆனால், தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்தும் விலகி இருக்கிறார் விராட் கோலி. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் கோலி அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். இந்தியா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த போதும் உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை அவரே வென்றார்.
உலகக்கோப்பை தோல்விக்கு பின் அவர் ஓய்வெடுக்க வேண்டி லண்டன் சென்றுள்ளார். அவருக்கு ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்தியா அடுத்து தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர், ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த நிலையில் விராட் கோலி தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் மட்டுமே தான் பங்கேற்க விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்து இருக்கிறார். டி20, ஒருநாள் போட்டிகளில் தான் சொல்லும் வரை தன்னை தேர்வு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இதுவரை ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட பங்கேற்கவில்லை.
பிசிசிஐ இளம் வீரர்கள் கொண்ட அணியை அடுத்த 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு அழைத்துச் செல்லும் முடிவில், மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலியை ஒதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அது வெளியே தெரியாமல் இருக்க வேண்டி அவர்களாக தங்களை தேர்வு செய்ய வேண்டாம் என கூறி விட்டார்கள் என பிசிசிஐ அவர்களிடம் இருந்து ஒரு கடிதத்தை பெற்றுக் கொண்டு இவ்வாறு கூறலாம் என சில ரசிகர்கள் கூறுகின்றனர்.
எனினும், கடந்த இரண்டு மாதங்களாக ஆசிய கோப்பை, உலகக்கோப்பை என கடுமையான வேலைப் பளுவில் இருந்து இருக்கிறார் விராட் கோலி. அடுத்து தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வர உள்ள நிலையில் அதற்கு முன் நீண்ட ஓய்வு வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர் இந்த நீண்ட விடுப்பை எடுத்து கொண்டு குறைந்த ஓவர் போட்டிகளில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என கூறி இருப்பதாக பிசிசிஐ தரப்பு சொல்கிறது.