மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில்,அவரால் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அஸ்வினை தவிர எந்த தமிழக வீரருக்கும் இந்திய அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்காத நிலையே உள்ளது. அஸ்வின் கூட டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக பந்து வீசி வரும் வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக சில டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் நிலையில், எந்த காரணமும் இன்றி அவர்களுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு எப்போதோ ஏற்பட்ட ஒரு காயத்தை சுட்டிக்காட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால், அதற்கு அடுத்து இந்திய அணியை தேர்வு செய்யும் போது அவர்களை தேர்வு குழு மற்றும் இந்திய அணி நிர்வாகம் புறக்கணித்து விடுகிறது.
இந்த நிலையில் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களை இந்திய அணியில் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கம்பீர் பயிற்சியாளர் பதவியை ஏற்கும் முன்பு கிரிக்கெட் வர்ணனையாளராகவும், விமர்சகராகவும் செயல்பட்டு வந்தார். அப்போது நடராஜன் குறித்து அவர் பாராட்டிப் பேசியிருக்கிறார். அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என கூறி இருக்கிறார்.
அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்ட போது, அதே அணியில் வருண் சக்கரவர்த்தி முதன்மை சுழற் பந்துவீச்சாளராக இருந்தார். 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்றதற்கு வருண் சக்கரவர்த்தியும் முக்கிய காரணம். இந்த நிலையில் தமிழக வீரர்கள் இருவர் குறித்தும் கவுதம் கம்பீர் நல்ல எண்ணத்தில் இருப்பதால், அவர்கள் திறமையை நேரில் கண்டிருப்பதால் அவர்களை இந்திய அணியில் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.