மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் சமீபத்தில் உலக சாதனை செய்த கருண் நாயருக்கு இடம் அளிக்காதது குறித்து ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து மனமுடைந்து இருந்தார்.
2022 ஆம் ஆண்டு "கிரிக்கெட்டே.. எனக்கு ஒரு வாய்ப்பு கொடு" என பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் கருண் நாயர். இந்திய அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடி இருந்த அவர், 30 வயதை கடந்து விட்ட நிலையிலும் உள்ளூர் போட்டிகளில் உச்சம் தொட்டார்.

2025 விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடரில் அவர் அதிரடியாக ஆடி 7 இன்னிங்ஸ்களில் 752 ரன்களை குவித்து சாதனை படைத்திருந்தார். அந்த 7 இன்னிங்ஸ்களில் அவர் ஆறு முறை நாட் அவுட் ஆக இருந்து வியப்பை ஏற்படுத்தினார். அதனால் அவரது பேட்டிங் சராசரி 752 என்பதாக இருக்கிறது. இப்படி ஒரு சாதனையை எந்த ஒருநாள் தொடரிலும், எந்த வீரரும் செய்ததே இல்லை.
இப்படி உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் வீரருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்பட வேண்டும் என பலரும் கூறி வந்தனர். சச்சின் டெண்டுல்கர் அவரை வாழ்த்தி இருந்தார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணித் தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய நாள் சச்சின் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்ததன் மூலம் கருணை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என அவர் மறைமுகமாக உணர்த்தியதாகவே பார்க்கப்பட்டது.
இப்படி ரசிகர்களும், ஜாம்பவான்களும் கருண் நாயரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என சுட்டிக்காட்டி வந்த நிலையில் இந்திய அணியின் தேர்வுக் குழு அதற்கு மாறான முடிவை எடுத்து இருக்கிறது. 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் இடம் பெற்ற அணியில் நான்கு வீரர்களை மட்டும் மாற்றி விட்டு கிட்டத்தட்ட அதே அணியை மீண்டும் அறிவித்து இருக்கிறது தேர்வுக் குழு.
அசாதாரண சாதனை செய்த கருண் நாயரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், "752 ரன் என்ற பேட்டிங் சராசரி வைத்திருந்தாலும் அவருக்கு இந்த அணியில் இடம் அளிக்க முடியாது." எனக் கூறினார். இது ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.
உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்குத்தான் இந்திய அணியில் இடம் என்று கூறுகிறீர்கள்? அப்படி உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடி இருந்தாலும் அவருக்கு அணியில் இடம் இல்லை என்றும் கூறுகிறீர்கள்.. இது நியாயமா? என வெகுண்டு எழுந்து உள்ளனர்.
2017 ஆம் ஆண்டு கருண் நாயர் கடைசியாக இந்திய அணியில் இடம் பெற்று ஆடி இருந்தார். அதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் முச்சதம் அடித்திருந்தார். அதன் பின்னர் சில வாய்ப்புகள் மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்டது. சுமார் ஏழு ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.
ஆனால், விடாமுயற்சியுடன் போராடி உள்ளூர் போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் 752 ரன்கள் குவித்த பின்னரும் அவருக்கு பிசிசிஐ வாய்ப்பு மறுத்து இருப்பது அவரது தன்னம்பிக்கையை குலைக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.