மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், யாரும் எதிர்பாராத ஒரு விஷயமாக, இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிசிசிஐ-க்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் எப்படி அவருக்கு துணை கேப்டன் பதவி கிடைத்தது? இதன் பின்னணி என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதற்காக இந்தத் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது என்பது குறித்து பிசிசிஐ வட்டாரத்திலிருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன. ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்திய அணியில் இடம் பிடித்து வருகிறார். அவர் முன்பிருந்தே இந்திய அணியின் வருங்கால கேப்டன் பதவிக்கான வீரராக இருப்பார் என்ற திட்டம் இந்திய அணியின் தேர்வுக் குழுவிடம் இருந்தது. ஆனால், இடையே அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் ஃபார்ம் அவுட் காரணமாக அவருக்கான கேப்டன் பதவி வாய்ப்பு நழுவிப் போனது. அது இப்போது சுப்மன் கில்லுக்குக் கிடைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மூன்று முறை வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, ஒரு முறை கோப்பையையும் வென்று இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இதன் மூலம் அவரது தலைமைப் பண்பை பிசிசிஐ கவனத்தில் எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஒருவேளை சுப்மன் கில்லுக்குக் காயம் ஏற்பட்டால் அல்லது பணிச்சுமை காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழும். அதற்காக நிரந்தர மாற்றுத் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் டி20 அணியிலும் இடம் பெற வாய்ப்பு உள்ளதால், சூர்யகுமார் யாதவுக்குப் பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுவார்.
மேலும், அணியின் முக்கிய ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தற்போது காயத்தில் சிக்கியிருக்கிறார். ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. இந்தச் சூழ்நிலையும் ஸ்ரேயாஸ் ஐயருக்கான துணை கேப்டன் வாய்ப்புக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இந்தக் காரணங்களால் தான் ஸ்ரேயாஸ் ஐயருக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய அணியின் எதிர்காலத் தலைமைப் பொறுப்புக்கான திட்டமிட்ட நகர்வாகவே பார்க்கப்படுகிறது.