மொஹாலி: இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் - சுப்மன் கில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 276 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின்னர் 277 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் - சுப்மன் கில் இணை களமிறங்கியது. ஒரு பக்கம் சுப்மன் கில் அதிரடியாக தொடங்க, இன்னொரு பக்கம் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக தொடங்கினார். இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடியதால் 9 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி 50 ரன்களை கடந்தது.
தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்-ம் அதிரடியில் களமிறங்க இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இன்னொரு பக்கம் சுப்மன் கில் மேத்யூ ஷார்ட் பந்துவீச்சில் பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதேபோல் 92 பந்துகளில் இவர்களின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்தது.
சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்-ம் 60 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் அரைசதத்தை சுப்மன் கில் விளாசினார். பின்னர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய ருதுராஜ் கெய்க்வாட், ஆடம் ஸாம்பா பந்தில் 77 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் அரைசதம் விளாசிய பின் அமைதி காத்த சுப்மன் கில் 63 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களின் பேட்டிங்கை பார்த்த பலரும், ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் விளையாடிய பிட்ச்சில் தான் இவர்களும் பேட்டிங் செய்கிறார்களா என்று பாராட்டி வருகின்றனர். அதேபோல் இந்திய அணியின் எதிர்காலம் கண் முன் தெரிவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.