சௌதாம்ப்டன் : இந்தியா, இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. அதில் இந்தியாவிற்கு நல்ல துவக்கம் தருவார்கள் என எதிர்பார்த்த தவான், ராகுல் துவக்கக் கூட்டணி ஏமாற்றியுள்ளது.
நேற்று முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா சிறப்பாக பந்து வீசி 246 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆட்டமிழக்கச் செய்தது. இந்தியா சார்பில் அனைத்து பந்துவீச்சாளர்களும் தங்கள் பங்களிப்பை அளித்தனர். அடுத்து இந்தியா பேட்டிங் செய்ய வந்தது. நேற்று முதல் நாள் முடிவில் இந்தியா 19 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் இருந்தது.
தொடர்ந்து இந்தியா இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் ராகுல் 19 ரன்களுக்கு பிராட் பந்தில் (LBW) அவுட்டானார். அப்போது இந்தியா 37 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்த பத்து ஓவர்கள் முடிவில் தவான் 23 ரன்களுக்கு பிராட் பந்தில், விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
துவக்க வீரர்கள் இருவரும் மீண்டும் ஏமாற்றியுள்ளார்கள். மூன்றாவது டெஸ்டில் மட்டுமே இந்திய துவக்கம் இரண்டு இன்னிங்க்ஸிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் துவக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.
இவர்கள் இருவரும் சென்ற பின் கோலி, புஜாரா ஆடினர். அதில் கோலி 46 ரன்களுக்கு சாம் கர்ரன் பந்தில், குக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். புஜரா அரைசதம் அடித்தார். ரஹானே 11 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். இந்தியா 161 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது.
இந்தியா எப்படியும் இங்கிலாந்து அணி அடித்த 246 ரன்களை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக ரன்கள் முன்னிலை பெறுமா என்பது சந்தேகம் தான்.