மும்பை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரருமான மோகித் சர்மா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்திற்கு அவர் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
2011-ம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ஹரியானா அணிக்காக அறிமுகமானவர் மோகித் சர்மா. தனது துல்லியமான யார்க்கர்கள் மற்றும் ஸ்லோயர் பந்துகளுக்குப் பெயர் பெற்ற இவர், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் அரங்கில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.

ஓய்வு குறித்துத் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டுள்ள மோகித் சர்மா, "இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். ஹரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முதல் இந்திய ஜெர்சியை அணிந்தது மற்றும் ஐபிஎல்-ல் விளையாடியது வரை, இந்தப் பயணம் எனக்குக் கிடைத்த ஒரு ஆசீர்வாதம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். "எனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதுகெலும்பாக இருந்த ஹரியானா கிரிக்கெட் சங்கத்திற்குச் சிறப்பு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு வழிகாட்டிய அனிருத் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என்று கூறியுள்ளார்.
மேலும், பிசிசிஐ, ஐபிஎல் அணிகள், பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களுக்கும் நன்றி கூறிய அவர், தனது மனைவியைப் பற்றிக் குறிப்பிடுகையில், "எனது கோபங்களையும், மனநிலை மாற்றங்களையும் சகித்துக்கொண்டு, எல்லாவற்றிலும் எனக்குத் துணையாக நின்ற என் மனைவிக்குச் சிறப்பு நன்றி" என்று நெகிழ்ந்துள்ளார்.
ஒருநாள் போட்டிகள்: 26 (31 விக்கெட்டுகள், 5.46 எகானமி)
(முக்கியமாக 2015 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்தார்).
சர்வதேச டி20: 8 போட்டிகள் (6 விக்கெட்டுகள், 8.04 எகானமி)
முதல் தரப் போட்டிகள்: 44 போட்டிகள் (127 விக்கெட்கள், எகானமி 2.75).
ஐபிஎல் : 120 போட்டிகள் (134 விக்கெட்டுகள், 8.77 எகானமி)
சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து, பர்ப்பிள் கேப் வென்ற மோகித் சர்மா, பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார் என்ற காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளாக அவர் மீது விமர்சனம் இருந்தது. தற்போது 37 வயதான நிலையில் அவர் ஓய்வு பெற்றுள்ளார்.