மிர்பூர்: இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சில் இலங்கை அணி 213 ரன்களில் சுருண்டது.ஜாகிர்கானும், அமித் மிஸ்ராவும் சிறப்பாக பந்து வீசி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலங்கை அணி 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. சங்ககாரா 68 ரன்களும், சூரஜ் ரன்டிவ் 56 ரன்களும் எடுத்தனர்.ஐடியா கோப்பைக்கான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் 5வது ஆட்டத்தில் இன்று இந்தியாவும், இலங்கையும் மோதின.இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா டாஸ் வென்றார். முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.முதல் ஓவரிலேயே சுதிப்தியாகியின் பந்துவீச்சில் தரங்கா, தினேஷிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார் தரங்கா. இதையடுத்து தில்ஷானும் சங்ககாராவும் 5 ஓவர் வரை சேர்ந்து ஆடினார்கள். 8 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக ஆடிய தில்ஷான் 5.3வது ஓவரில் ஜாகீர்கானின் பந்தில் கம்பீரிடம் கேட்ச் கொடுத்தார். தில்ஷான் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.அடுத்து களமிறங்கிய மஹில ஜெயவர்த்தனேவும் 5 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 9 ஓவர்களில் 3 மூன்று விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆடவந்த சமரவீரா ஸ்ரீசாந்தின் பந்தில் எல்பிடபுள்யூ ஆனதால் ரன் எதுவும் இல்லாமல் நடையை கட்டினார்.இதேபோல் பின்னர் வந்த கடம்பியை தினேஷ் கார்த்திக் ரன் அவுட்டாக்கினார். 12 பந்துகளை சந்தித்த கடம்பி ஒரேயொரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். 13 வது ஓவரிலேயே விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. இதைத்தொடர்ந்து திஸாரா பெரேரா 11 ரன்களுடன் 18வது ஓவரில் யுவராஜ்சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 29வது ஓவர் வரை நின்று ஆடிய சங்ககாராவை யுவராஜ்சிங் பெவிலியனுக்கு அனுப்பினார். 78 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 68 ரன்கள் எடுத்தார் சங்ககாரா.இவருக்கு பின் வந்த துஷாரா 28 ரன்களும், சனக வெலிகதரா ஒரு ரன்னும் எடுத்தனர். சூரஜ்ரன்டிவ் பொறுமையாக ஆடி 56 ரன்களை சேர்த்தார். லக்மல் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இறுதியில், 46.1வது ஓவரில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. இந்திய பவுலர்களில் ஜாகிர்கான், அமித் மிஸ்ரா சிறப்பாக பந்து வீசினர். ஜாகிர்கான் 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட் வீழ்த்தி 38 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அதேபோல் மிஸ்ரா 9.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 40 ரன்கள் கொடுத்தார். யுவராஜ் சிங், ஸ்ரீசாந்த், சுதிப்தியாகி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.ஜெயித்தால் சிக்கல் இல்லை..இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டித்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிக்கு தேர்வாகும்.இலங்கை அணி தான் ஆடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 12 புள்ளியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று விட்டது. இந்திய அணி 2 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளியுடன் அடுத்த இடத்தில் உள்ளது. வங்கதேசம் 3 ஆட்டத்திலும் தோல்வியடைந்து விட்டது.இன்றைய ஆட்டத்தில் இந்தியா வென்றால் பிரச்சினை இல்லை. தோற்றாலும் பிரச்சினை இல்லை. ஆனால், கடைசி லீக்கில் வங்காளதேசத்தை (நாளை) கட்டாயம் வீழ்த்த வேண்டிய நெருக்கடி நிலை ஏற்படும். ஒருவேளை வங்காளதேச அணி இந்திய அணியை படுதோல்வியை அடையச் செய்தால் போட்டியை விட்டு வெளியேற வேண்டி வரும்.இன்றைய ஆட்டத்தில் இலங்கையின் திலகரத்னே தில்ஷான் மீண்டும் திரும்பியுள்ளார். லசிகா மலிங்காவுக்கு பதிலாக சனக வெலிகதரா சேர்க்கப்பட்டுள்ளார்.இந்திய அணியில் வீரேந்தர் ஷேவாக், ஆஷிஷ் நெஹரா மற்றும் ஹர்பஜன் ஆகியோர் மூவரும் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், அமித் மிஷ்ரா, சுதிப்தியாகி களத்தில் உள்ளனர். இந்தியா: தோனி, ஜாகீர்கான், கம்பீர், மிஷ்ரா, யுவராஜ்சிங், தினேஷ், ரெய்னா, ஸ்ரீசாந்த், விராட் கோலி, சுதீப் தியாகி, ரவீந்திர ஜடேஜாஇலங்கை: தரங்கா, தில்ஷான், சங்காரா, மஹில ஜெயவர்த்தனே, சமரவீரா, கண்டம்பி, திசரா பெரேரா, சூரஜ் ரன்டிவ், லக்மல், துஷாரா, சனகவெலிகதரா.