இந்தியாவில் சுற்றுப்பயணம்
தென் ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 15ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது.
பயிற்சியாளர் நியமனம்
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் பயிற்சியாளராக இந்தியாவை சேர்ந்த அமுல் முஜும்தர் நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதிகபட்ச ரன்கள்
மும்பையை சேர்ந்தவர் முஜும்தர். 44 வயதான அவர், 1994ம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். 171 முதல்தர போட்டிகளிலும், 113 லிஸ்ட் ஏ பிரிவு போட்டிகளிலும் ஆடியுள்ளார். அவர் 11,167 ரன்கள் குவித்துள்ளார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற பெருமை பெற்றவர்.
பல சாதனைகள்
மும்பை அணிக்காக பல வருடங்கள் ஆடிய அவர் அவரது காலத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்.
அக். டெஸ்ட்
அக்டோபரில் இந்தியாவிற்கு எதிரான தென் ஆப்ரிக்கா அணிக்கு டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அந்த தொடருக்கு மட்டும் அவர் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஒப்புக்கொண்டேன்
இதுகுறித்து முஜும்தர் கூறியதாவது: என்னை கடந்த வாரம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க அணுகினர். நானும் சரி என்று கூறிவிட்டேன். இது எனது முதல் சர்வதேச பயிற்சியாளர் வேலை. எனவே, வெற்றிகரமாக முடித்து காட்ட இப்போதே களத்தில் இறங்கிவிட்டேன் என்றார்.