என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த தமிழக வீரர் முரளி விஜய், அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின் என பலரும் ஜொலித்து வருகின்றனர். சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக்கும் கடந்த டி20 உலகக்கோப்பையில் கவனம் ஈர்த்தார்.
ஆனால் ஒரு காலத்தில் இந்தியாவின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த முரளி விஜய் மட்டும் எங்கு சென்றார் என்றே தெரியாத அளவிற்கு ரசிகர்கள் தேடினர். ஃபார்ம் சரியில்லை என சிறிது காலம் புறக்கணிக்கப்பட்ட அவர் அதன்பின்னர் வாய்ப்பே கிடைக்காமல் உள்ளார்.

அடுத்தக்கட்ட திட்டம்
38 வயதாகும் முரளி விஜய் கடைசியாக 2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக விளையாடினார். அதன்பின் ஐபிஎல் மற்றும் ரஞ்சிக்கோப்பை தொடரில் கவனம் செலுத்திய அவர் 2019ம் ஆண்டு அதில் இருந்து ஒதுங்கினார். ஐபிஎல்-ல் சிஎஸ்கேவுக்காக தொடர்ந்து ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 2020ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக கடைசியாக விளையாடினார்.

ஓய்வு
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் இன்று ஓய்வு பெறுவதாக மரியாதையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 2002ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இந்தியாவுக்காக விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ரசிகர்களுக்கு நன்றி
எனக்கு வாய்ப்புகளை கொடுத்து உயர்த்திவிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம், தமிழ்நாடு வாரியம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் நன்றி. எனக்காக உதவிய, ஆதரவு கொடுத்த சக அணி வீரர்கள், ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி. எனது கனவுகளை நிஜமாக்க நீங்கள் உதவியுள்ளீர்கள். எனது வாழ்வின் ஏற்ற தாழ்வுகளில் உடன் இருந்து ஆதரவுக்கொடுத்த ரசிகர்களுக்கு மிகவும் நன்றி என முரளி விஜய் கூறியுள்ளார்.

அடுத்த நடவடிக்கை
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும், உள்நாட்டு தொடர்களில் விளையாடுவார் என்று தான் தெரிகிறது. 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல்-ல் இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. தற்போதைக்கு டி.என்.பி.எல் தொடரில் விளையாடி வருகிறார். வாய்ப்பு கிடைத்தால் அயல்நாட்டு தொடர்களில் விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விவரங்கள்
முரளி விஜய் இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,982 ரன்களை அடித்துள்ளார். அதில் 12 சதங்களும், 15 அரைசதங்களும் அடங்கும். 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 339 ரன்களும், 9 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 169 ரன்களையும் அடித்துள்ளார். சர்வதேச அளவில் மொத்தமாக 12 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களை அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications