அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசிய சாய் சுதர்சன் குறித்து இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா ஆகியோரை நினைத்து சிஎஸ்கே ரசிகர்கள் அச்சத்தில் இருந்த நிலையில், அவுட் ஆஃப் சிலபஸாக வந்துள்ளார் சாய் சுதர்சன். 67 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை குஜராத் அணி இழந்த போது களமிறங்கிய சாய் சுதர்சன், பேட்டிங் மூலம் ஒரு புயலேயே உருவாக்கிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு மிரட்டிவிட்டார்.

215 ரன்கள் என்ற இலக்கை குஜராத் அணி நிர்ணயிக்க முழு காரணமாகவும் சாய் சுதர்சன் அமைந்துள்ளார். 47 பந்துகளில் 96 ரனக்ள் குவித்த சாய் சுதர்சனின் ஆட்டத்தால், சர்வதேச கிரிக்கெட் வீரர்களே மிரண்டு போயுள்ளனர். சாய் சுதர்சன் ஆட்டம் சென்னை அணி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், அவர் தமிழக கிரிக்கெட் வீரர் என்பதால் சிஎஸ்கே ரசிகர்களும் அழுதுகொண்டே பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், சாய் சுதர்சன் ஆட்டத்தை ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஆழ்வார்பேட்டை கிரிக்கெட் கிளப்பில் தொடங்கிய பயணம், அடுத்ததாக ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் மூலம் தமிழ்நாடு அணிக்கு வர சாய் சுதர்சனுக்கு 3 ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டுள்ளது. இதனால் சாய் சுதர்சனின் அடுத்த ஸ்டாப் எங்கே? என்று ஒரு ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல் சாய் சுதர்சனை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிய குஜராத் அணிக்கும் அஸ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார். மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் அதிரடியாக ஆடவில்லை என்று சாய் சுதர்சனை கடைசி ஓவரை விளையாட விடாமல் குஜராத் அணி ரிட்டயர்ட் அவுட் முறையில் ஆட்டமிழக்க வைத்தது. ஆனால் இறுதிப்போட்டியில் சாய் சுதர்சனின் ஆட்டம் குஜராத் அணிக்கும் பதிலடியாக அமைந்துள்ளது.