ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளித்து ரன் குவிப்போம் என்று தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் டொமிங்கா கூறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஹிமாலச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலை வாசஸ்தலமான தர்மசாலாவில் வருகிற 2ம் தேதி நடக்கிறது. முன்னதாக, நாளை அந்த அணி, டெல்லியில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக டி20 பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.
இதையொட்டி பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க 20 ஓவர் அணியினர் நேற்று பிற்பகல் டெல்லிக்கு வந்தடைந்தனர்.
இந்தியாவுக்கு கிளம்புவதற்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ ஜோகனஸ்பர்க் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் பயிற்சியாளரான பிறகு இதுதான் எனது முதல் இந்திய சுற்றுப்பயணம். தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். இந்த சீரிஸ் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. இதற்கு முன்பு நாங்கள் ஆடிய சுற்றுப்பயணங்கள் சராசரியாக 42 நாட்களில் முடிந்துவிடும். ஆனால், இந்தியாவில் 72 நாட்கள் கொண்ட சுற்றுப்பயணம்.
சுழற்பந்து வீச்சில் மட்டுமின்றி இந்திய அணியில் உமேஷ் யாதவ், மோகித் ஷர்மா போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கிறார்கள். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர்கள் எங்களை விட அதிகமான ஷாட்பிட்ச் பந்துகளை ஆக்ரோஷமாக வீசியதை பார்க்க முடிந்தது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே, அதன் பிறகு அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும். எனவே அவர்களின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை சிறப்பாக அடித்து ஆடிவிட்டால், அதன் பிறகு சுழற்பந்து வீச்சை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
எங்களது மிடில்வரிசை பேட்ஸ்மேன்கள், சுழற்பந்து வீச்சில் தடுமாறினால் நெருக்கடி ஏற்பட்டு விடும் என்பதையும் உணர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.