லண்டன்:முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை மனைவி மற்றும் காதலியிடம் இருந்து ஒதுங்கி இருக்கும்படி, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா 2-1 என வென்றது. அடுத்து நடந்த ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது. அதற்கு முன் ஜூலை 25 முதல் 28ம் தேதி வரை செல்ம்ஸ்போர்டில் எச்செக்ஸ் அணியுடன் பயிற்சி ஆட்டம் நடக்க உள்ளது.
ஒருதினப் போட்டித் தொடர் முடிந்த பிறகு, பல இந்திய வீரர்கள், தங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன், இங்கிலாந்தில் விடுமுறையை கழித்தனர். இந்த நிலையில், செல்ம்ஸ்போர்டுக்கு இந்திய அணி புறப்பட உள்ளது. அதற்கு முன், இந்திய வீரர்களுக்கு அணி நிர்வாகம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மனைவி மற்றும் காதலிகள் உடனிருப்பதால், வீரர்கள் சரியாக செயல்படவில்லை என முன்பு குற்றஞ்சாட்டப்பட்டன.
அதுபோன்ற சர்ச்சை ஏற்படுவதை தவிர்க்க, குறைந்தபட்சம், முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் வரை மனைவி மற்றும் காதலிகளிடம் இருந்து ஒதுங்கி இருக்கும்படி வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.