அங்கே செல்வதில்லை
கடந்த சில வருடங்களாகவே காயத்தில் சிக்கும் இந்திய வீரர்கள் பலரும் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அதிகம் செல்வதில்லை. தாங்களாகவே மருத்துவமனையை தேர்வு செய்து, அங்கே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இங்கிலாந்து சென்ற வீரர்கள்
சில வீரர்கள் தங்கள் சொந்த செலவில் வெளிநாடுகளுக்குக் கூட சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமீபத்தில் பும்ரா, ஹர்திக் பண்டியா உள்ளிட்டோர் இங்கிலாந்துக்கு சென்று அங்கு இருக்கும் சிறப்பு விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
ரோஹித், தவான்
கடந்த ஆண்டுகளில் கூட ரோஹித் சர்மா, ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்கள் காயம் ஏற்பட்ட நேரங்களில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றதில்லை. அப்போதே அது பரபரப்பாக பேசப்பட்டது.
பிசிசிஐ ஒப்பந்தம்
பிசிசிஐயுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் இந்திய வீரர்கள் காயம் ஏற்பட்டாலோ, காயம் குணமான பின் மீண்டும் கிரிக்கெட் ஆட உடற்தகுதி பெற வேண்டும் என்றாலோ தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தான் செல்ல வேண்டும்.
புறக்கணிக்க காரணம் என்ன?
ஆனால், தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் வசதிகள் நவீனப்படுத்தப்படாமல் இருப்பதும், அங்கே இருக்கும் பிசியோதெரபிஸ்ட் நிபுணர்கள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் மேல் இந்திய வீரர்கள் நம்பிக்கை இல்லாமல் இருப்பதுமே அதை புறக்கணிக்க முக்கிய காரணம்.
டிராவிட் என்ன செய்கிறார்?
சில மாதங்கள் முன்பு ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வந்தார். அவர் இப்போதைக்கு இளம் வீரர்களுக்கான பயிற்சி வசதிகள், இந்திய ஏ அணி மற்றும் இந்திய அண்டர் 19 அணி முன்னேற்றம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
புவனேஸ்வர் குமார்
அதனால், இந்திய வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியை புறக்கணித்து வருவது குறித்து அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. சமீபத்தில் புவனேஸ்வர் குமார் தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குணமாக சிகிச்சை பெற்று, உடற்தகுதி பயிற்சிகளை அங்கே மேற்கொண்டார்.
புவனேஸ்வர் குமாருக்கு என்ன நடந்தது?
முடிவில் அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக ஒப்புதல் அளித்தது தேசிய கிரிக்கெட் அகாடமி. அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆடிய புவனேஸ்வர் குமார் விளையாட்டு வீரர்களுக்கு வரும் குடலிறக்கம் ஏற்பட்டு மீண்டும் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
ஒப்புதல் தர மறுப்பு
அதே போல, பும்ரா வெளியே தனிப்பட்ட முறையில் சிகிச்சை மற்றும் உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொண்ட பின் தேசிய கிரிக்கெட் அகாடமியிடம் உடற்தகுதி பெற்று விட்டதாக ஒப்புதல் பெற வந்தார். அப்போது வெளியே சிகிச்சை பெற்றதால் அவருக்கு உடற்தகுதி பரிசோதனை செய்து ஒப்புதல் தர மறுத்துவிட்டார் டிராவிட்.
கங்குலி முடிவு
இப்படி தேசிய கிரிக்கெட் அகாடமி - இந்திய அணி வீரர்கள் இடையே விரிசல் அதிகரித்து வருவதால் அதை தீர்த்து வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. இது குறித்து அவரே ராகுல் டிராவிட்டிடம் பேசி இருக்கிறார். விரைவில் மாற்றம் வருமா?