மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் வீரர்கள் களத்தில் நண்பர்களாக இருக்கக் கூடாது என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிய நிலையில், 48.5 ஓவர்களில் 266 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. இந்தப் போட்டியின் போது இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் வீரர்கள் யாரும் களத்தில் மோதிக் கொள்ளவே இல்லை. தங்களது ஆட்டத்தில் மட்டுமே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் முந்தைய காலத்தில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் ஏராளமான முறை மோதியுள்ளனர். கம்பீர் - கம்ரான் அக்மல், கம்ரான் அக்மல் - இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங் - சோயப் அக்தர் என்று ஒவ்வொரு முறை இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடக்கும் போதும் களத்தில் வீரர்கள் மோதிக் கொண்டுள்ளனர். ஆனால் தற்போது இரு அணி வீரர்களும் நட்பு மற்றும் மரியாதையுடன் இருப்பதால், ஸ்லெட்ஜிங் செய்வதையே பார்க்க முடிவதில்லை.
சின்ன சின்ன ஸ்லெட்ஜிங்கும் தவறில்லை என்ற போதும், களத்தில் ஸ்லெட்ஜிங்கே இல்லாமல் இருப்பது ரைவல்ரி ஆட்டங்கள் மீதான சுவாரஸ்யத்தை குறைப்பதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசுகையில், தேசிய அணிக்காக களமிறங்கும் போது வீரர்களுக்கு இடையிலான நட்பை பவுண்டரி லைனுக்கு வெளியில் தான் வைக்க வேண்டும். இரு அணிகள் வீரர்களின் கண்களிலும் ஆக்ரோஷம் கொப்பளிக்க வேண்டும்.
கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பின் சில மணி நேரங்களுக்கு பின் வீரர்கள் நட்பை வெளிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் களத்தில் ஆக்ரோஷம் இருப்பது முக்கியம். ஏனென்றால் நீங்கள் உங்களை மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக விளையாடுகிறீர்கள். தற்போது களத்திலேயே இரு அணி வீரர்களும் நட்பு பாராட்டிக் கொள்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அதனை பார்க்கவே முடியாது.
நானும் கம்ரான் அக்மலும் சிறந்த நண்பர்கள் தான். நான் அவருக்கும், அவர் எனக்கும் பேட் பரிசாக அளித்திருக்கிறோம். கம்ரான் அக்மல் கொடுத்த பேட் மூலமாக ஒரு சீசன் முழுக்க விளையாடி ஏராளமான ரன்களை சேர்த்திருக்கிறேன். அண்மையில் கூட நாங்கள் சில மணி நேரங்களாக பேசிக் கொண்டோம். என்னை பொறுத்தவரை ஸ்லெட்ஜிங் இருக்க வேண்டும். ஆனால் அந்த ஸ்லெட்ஜிங்கில் சொந்த விஷயங்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ கொண்டு வரக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.