டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கு முன் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சந்திரயான் 3ஐ நிலவில் தரையிறக்கிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துள்ள புகைப்படம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. இந்த டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுவிட்டதால், 3வது டி20 போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும். இருப்பினும் அயர்லாந்து அணியிடம் தோற்றாம் மானப்பிரச்சனை என்பதால், இந்திய வீரர்கள் கவனமாக இருப்பார்கள்.
இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது டி20 ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது. ஆனால் டப்ளின் மைதானம் அமைந்துள்ள பகுதியில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் 3வது டி20 போட்டிக்கான டாஸ் மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இதனால் ஆட்டம் தொடங்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதனிடையே மைதானத்தில் இந்திய அணியின் இளம் வீரர்களான ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான் உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். மழை பெய்வதற்கு முன் ஜித்தேஷ் சர்மா விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட அனுபவ வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆசியப் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பலரும் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியக் கோப்பைப் போட்டிக்கு முன் இந்திய அணிக்காக அறிமுகமாவதோடு, கள அனுபவமும் எப்படி இருக்கும் என்ற வீரர்களுக்கு புரிய வரும்.
இருப்பினும் மழை நின்றால் மட்டுமே ஆட்டம் தொடங்கும் என்பதால், மழை எப்போது நிற்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதனிடையே மழை பெய்த காரணத்தால், இந்திய வீரர்கள் அனைவரும் இந்தியாவின் சரித்திர சாதனையான சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியதை தொலைக்காட்சியில் அமர்ந்து ஒன்றாக பார்த்துள்ளனர். இதன் புகைப்படங்கள் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.