ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சதம் அடித்து கலக்கிய நிலையில், ஆஸ்திரேலிய டி20 தொடரில் 2 போட்டிகளில் பேட்டிங் செய்து 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் முதல் போட்டியில் 7 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மூன்றாவது போட்டியில் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 23 ரன்கள் குவித்தது ஆறுதல் என்றாலும், ரோஹித் போன்ற முன்னணி வீரருக்கு இந்த ரன்கள் குறைவு தான்.
கே எல் ராகுல்
ராகுல் இந்திய அணியில் போதிய அளவு வாய்ப்பு பெற்று விட்டார். ஆனால், தொடர்ந்து ரன் குவிப்பதில்லை. டி20 தொடரிலும் ராகுலின் சொதப்பல் தொடர்ந்தது. 2 போட்டிகளில் ஆடிய ராகுல் 27 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிலும், மூன்றாவது டி20 போட்டியில் 20 பந்துகளில் 14 ரன்கள் அடித்தது படு மோசம்.
டெஸ்டில் இடம் சந்தேகம்
அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைப்பது சந்தேகமே. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் ராகுல் தொடர்ந்து ரன் குவிக்கவில்லை என்பதால் ராகுல் டெஸ்ட் தொடரில் வெளியே அமரவைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.
ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலிய டி20 தொடரில் பங்கேற்றார். விக்கெட் கீப்பிங்கில் சில சொதப்பல்கள் இருந்தன. அது தவிர்த்து பேட்டிங்கில் சூழ்நிலை உணர்ந்து ஆடுவதில்லை என்ற பெயரை எடுத்துள்ளார் ரிஷப் பண்ட். வெற்றிக்கு இத்தனை ரன்கள் தேவை, கையில் பேட்ஸ்மேன் விக்கெட்கள் இல்லை என்ற சூழ்நிலையில் கூட மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழந்து செல்கிறார் பண்ட். முதல் போட்டியில் அதிரடியாக ஆடி 20 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அருகே அழைத்து சென்றாலும், தேவையற்ற ஷாட் ஆடி வெளியேறினார். மூன்றாம் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
டெஸ்டில் இடம் உண்டு
ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பதில் எந்த சிரமமும் இருக்காது. காரணம், தினேஷ் கார்த்திக் டெஸ்ட் அணியில் இல்லை. மாற்று விக்கெட் கீப்பராக டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளவர் பார்த்திவ் பட்டேல். அவர் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இல்லை. எனவே, ரிஷப் பண்ட்டுக்கு நல்ல அனுபவம் என்ற வகையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விடுவார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் நன்றாகவே ஆடினார் பண்ட்.
புவனேஸ்வர் குமார், பும்ரா
டி20 தொடரில் பந்துவீச்சில் புவி மற்றும் பும்ரா மிக சுமாராக செயல்பட்டனர். ரன்கள் விட்டுக் கொடுப்பதில் தாராளமாக நடந்து கொண்டனர். அதிலும், மூன்றாவது போட்டியில் இருவருமே ஓவருக்கு 9 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
டெஸ்டில் இடம் உண்டு
இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இருவரும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விடுவார்கள். எனினும், டி20 தொடரில் சொதப்பியது போல இல்லாமல், ஆஸ்திரேலிய மைதானங்களின் தன்மையை நன்கு உணர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச வேண்டும்.