சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியினர் ஆஸ்திரேலியாவுக்கு வருவதாக இருந்தால் அங்கு அவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்களாம். ஆஸ்திரேலிய அரசின் விதிமுறைப்படி அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமாம்.
அனேகமாக இந்திய வீர்ரகள் அடிலைட் ஓவல் மைதானத்தில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. மேலும் இதே மைதானத்திலேயே இந்திய வீர்ரகளுக்கு பயிற்சியும் எடுத்துக் கொள்ள முடியும். குவாரன்டைன் சமயத்திலும் கூட இவர்களால் பயிற்சியில் ஈடுபட முடியுமாம்.

வெளிநாடுகளிலிருந்து வருவோர் கட்டாயம் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்பது ஆஸ்திரேலிய அரசின் உத்தரவாகும். எனவே அதற்கேற்ப இந்திய வீரர்களும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்தியா -ஆஸ்திரேலியா இடையே டிசம்பர் மாதத்தில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக தற்போதே ஆயத்தப் பணிகள் ஆரம்பித்து விட்டன.
ஆனால் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய வீரர்களுக்கு 14 நாள் தனிமை என்பது அதிகம். எனவே அதை சற்றுக் குறைக்க முன்வர வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கோரிக்கை விடுத்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் டிசம்பர் 3ம் தேதி தொடங்கவுள்ளது.
பார்க்கலாம்.. குறைப்பார்களா அல்லது கட்டாயம் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என உத்தரவிடுவார்களா என்பதை.