
முதல் டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு முதல் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் ஒல்லி ராபின்சன், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை சாய்த்து அசத்தினார். அதே போல பேட்டிங்கில் 42 ரன்களும் அடித்திருந்தார். ஆனால் அவருக்கு பாராட்டிற்கு பதிலாக விமர்சனங்கள் தான் அதிகளவில் வந்தது.

ராபின்சன் மன்னிப்பு
8 வருடங்களுக்கு முன்பு சில டுவீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியைத் தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ராபின்சன் மன்னிப்பும் கேட்டிருந்தார்.

தடை
ஆனால் ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. அவர் 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அஸ்வின் வருத்தம்
இந்நிலையில் ராபின்சன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு இந்திய வீரர் அஸ்வின் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒல்லி ராபின்சன் சில வருடங்களுக்கு முன்னர் செய்த தவறுகளின் விளைவுகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் முதல் போட்டியில் அனைவரையும் வியக்கவைத்த உடனேயே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை இனி வரும் காலம் முழுவதும் சமூக வலைதளங்களில் மறக்க முடியாத ஒன்றாக நிலைத்துவிடும் என்பதை நினைத்து வருந்துகிறேன் எனக்கூறியுள்ளார்.

ஆதரவுக்குரல்
அஸ்வினை போலவே வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் ஒல்லி ராபின்சன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மிக கடுமையானது என தெரிவித்துள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனே இங்கிலாந்து வாரியத்தின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு செய்த தவறுக்கு
தற்போது சஸ்பெண்ட் செய்வது மிகவும் கடுமையான ஒன்று. எனவே அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











