இந்திய சுழற்பந்து வீச்சு வரலாற்றிலேயே முதல் முறை.. மோசமான சா(சோ)தனை படைத்த அஸ்வின், ஜடேஜா
கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அஸ்வின் இந்திய அணியில் தொடருவாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
சுழற்பந்து வீச்சில் புகழ் பெற்ற இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களா இப்படி ஒரு மோசமான சாதனைக்கு காரணமானார்கள் என்பதே இப்போது உலக அளவிலான கிரிக்கெட் விமர்சகர்களின் பேச்சாக உள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. மழை காரணமாக முதல் 2 நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது.

வாய்ப்பு தராத கேப்டன்
மழை காரணமாக ஈரப்பதம் இருந்ததால், பிட்ச், வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. சிறப்பாக பந்துகள் ஸ்விங் ஆகின. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து வீச கேப்டன் அதிகம் வாய்ப்பு தரவில்லை.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரம்
இந்தியா முதல் இன்னிங்சில் 83.4 ஓவர்களும், 2வது இன்னிங்சில் 26.3 ஓவர்களும் பந்து வீசியது. இரு இன்னிங்சுகளிலும் மொத்தம் 17 விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் வீழ்த்தினர். இந்த 17 விக்கெட்டுக்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் கைப்பற்றினார்கள்.

அஸ்வினும், ஜடேஜாவும்
முதல் இன்னிங்சில் அஸ்வின் 8 ஓவர், ஜடேஜா ஒரு ஓவர் வீசினர். 2வது இன்னிங்சில் ஜடேஜா ஒரு ஓவர் வீசினார். அஸ்வின் ஓவரே வீசவில்லை. ஆக மொத்தம் இரு இன்னிங்சுகளிலும் சேர்த்து இருவரும் 10 ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். ஆனால் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

முதல் முறை
அதேநேரம், இலங்கை பந்து வீசியபோது அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்திய மண்ணில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தாதது இதுவே முதல்முறையாகும். அஸ்வினுக்கு வெகு காலத்திற்கு பிறகு இப்போதுதான் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் அவர் விக்கெட் எதையும் வீழ்த்தாதது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications