மும்பை : தன் பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு இந்தியாவின் பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக உலகம் முழுவதுமே ஓரினச்சேர்க்கை மற்றும் தன் பாலின திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. உலகின் பல்வேறு நாடுகள் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்தியா இதனை குற்றமாக அங்கீகரித்து வருகிறது.

தன் பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கும் அரசு தடை விதித்து இருக்கிறது. இந்த நிலையில் தன் பாலின திருமணத்திற்கு சட்டபூர்வமாக அனுமதி அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு வேதனை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவுக்காக பல சர்வதேச ஓட்டப்பந்தயங்களில் பதக்கம் வாங்கியுள்ள டூட்டி சந்த், தற்போது தேசிய அளவிலும் சாம்பியனாக இருக்கிறார். மேலும் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற வீராங்கனை பெருமையும் டூட்டி சந்த் பெற்று இருக்கிறார். முதலில் டூட்டி சந்த், கடந்த ஐந்து ஆண்டுகளாக மோனலிசா என்ற பெண்ணுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டூட்டி சந்த், நான் என்னுடைய காதலி மோனலிசாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்தேன். ஆனால் நீதிமன்றத்தின் இந்த முடிவு எங்களுக்கெல்லாம் ஏமாற்றத்தை கொடுக்கிறது. நானும் மோனலிசாவும் 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறோம்.எங்களுடைய முடிவை நாங்கள் எடுப்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டம் ஏற்று தன் பாலின திருமணத்திற்கு அனுமதி அளிப்பார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். நாங்கள் யாரையும் எங்களுடன் சேர்ந்து வாழுங்கள் என்று வற்புறுத்துவதில்லை. எங்களுடைய முடிவை தான் நாங்கள் எடுக்கிறோம். எங்கள் வாழ்க்கையை நாங்கள் எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற உரிமை எங்களுக்கு இருக்கிறது.
ஏன் எங்களால் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாதா? பல நாடுகள் தன் பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் உங்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை? தேர்தலில் வாக்களிப்பதற்கு அனைவருக்கும் உரிமை இருப்பது போல் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுப்பதற்கு எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று டூட்டி சந்த் கூறியுள்ளார். இதனிடையே டூட்டி சந்தின் பெற்றோர்கள் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். ஒரு பெண்ணுடன் தனியாக வாழ்ந்து வருவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.