மும்பை: 2024 ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ராபின் உத்தப்பா தலைமையிலான ஏழு வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஆறு வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணி :
ராபின் உத்தப்பா (கேப்டன்), மனோஜ் திவாரி, ஷபாஸ் நதீம், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, ஸ்டூவர்ட் பின்னி, கேதர் ஜாதவ் மற்றும் பாரத் சிப்லி
மிகச் சிறிய அளவிலான இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா பல ஆண்டுகளாக விளையாடி வருகிறது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு பங்கேற்று இருந்தது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி மீண்டும் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் விளையாட உள்ளது.
2017 ஆம் ஆண்டுடன் இந்த தொடர் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு இருந்தது. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்பு இப்போது மீண்டும் நடைபெற உள்ளது. இந்த முறை இந்தியாவும் பங்கேற்க உள்ளதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. முதல் போட்டியிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி மொத்தமாக 12 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய முக்கிய அணிகளும் பங்கேற்க உள்ளன. இந்திய அணி கடைசியாக 2005 ஆம் ஆண்டு ஹாங்காங் சிக்ஸஸ் தொடரை வென்று இருந்தது.
பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் தலா ஐந்து முறை இந்த கோப்பையை வென்று சாதனை படைத்தது உள்ளன. இதற்கு முன் இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், தோனி, அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான் வீரர்கள் விளையாடி உள்ளனர்.
மிகச் சிறிய பவுண்டரி எல்லையுடன் இந்த போட்டி நடைபெறும் என்பதால் அதிக அளவில் சிக்ஸ் அடிக்கப்படும். மேலும், ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள். அதனாலேயே இந்த தொடருக்கு ஹாங்காங் சிக்ஸஸ் என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் ஐந்து ஓவர் பந்து வீசும். ஒரு ஓவருக்கு எட்டு பந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி மொத்தம் 40 பந்துகள் வீசப்படும். ஒரு அணியில் ஆறு வீரர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். அதில் ஒரு விக்கெட் கீப்பர் தவிர மற்ற ஐந்து வீரர்களும் தலா ஒரு ஓவர் பந்து வீச வேண்டும். வைடு மற்றும் நோ பால் ஆகியவற்றுக்கு இரண்டு ரன்கள் பெனால்ட்டி அளிக்கப்படும்.
ஒரு அணியின் ஐந்து பேட்ஸ்மேன்கள், ஐந்து ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்து விட்டால், ஆறாவது பேட்ஸ்மேன், தான் அவுட் ஆகும் வரை விளையாடலாம். ஐந்தாவது பேட்ஸ்மேன் அவருக்கு ரன்னராக இருப்பார். அதாவது ஆட்டமிழந்த ஐந்தாவது பேட்ஸ்மேன் எதிர்மனையில் நின்று ரன் ஓடும் வேலையை மட்டுமே செய்வார். ஆனால், அனைத்து பந்துகளையும் ஆறாவது பேட்ஸ்மேன் சந்திக்கலாம். அவர் அவுட் ஆகும் வரை அல்லது ஐந்து ஓவர் முடியும் வரை இதை தொடரலாம்.
அதேபோல ஒரு பேட்ஸ்மேன் 31 ரன்களை எட்டிய பின் மைதானத்தை விட்டு ரிட்டையர் ஆகி வெளியேறலாம். அதன் பின் வேறு பேட்ஸ்மேன் அவுட் ஆனாலோ, ரிட்டையர் ஆனாலோ முன்னதாக ரிட்டையர் ஆன பேட்ஸ்மேன் மீண்டும் களத்துக்கு வரலாம்.