சென்னை : 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை. அது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அவர் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இந்த ஆண்டு 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். எனினும், அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இது குறித்து தேர்வு குழுவினரோ, கேப்டன் ரோகித் சர்மாவோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் நடராஜனுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் தான் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதில்லை என கூறி வருகின்றனர். ஆனால், உண்மை அது அல்ல. நடராஜன் சிலமுறை காயம் காரணமாக இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் போயிருந்தாலும் அவருக்கு பிசிசிஐ தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை என்பதே உண்மை.
இந்தியாவில் பும்ராவுக்கு பிறகு துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசக்கூடிய வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் மட்டுமே. அந்த காரணத்தால் தான் 2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டார். அப்போது டி20 தொடரிலும் ஒரு நாள் போட்டித் தொடரிலும் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் டெஸ்ட் தொடரிலும் வேறு பந்துவீச்சாளர் இல்லாத நிலையில் இடம் பெற்று சிறப்பாக பந்து வீசினார்.
அதன் பின் அவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்கும் என நம்பப்பட்டது. ஆனால், 2021 ஐபிஎல் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் காரணமாக 2021 டி20 உலக கோப்பையில் அவரால் விளையாட முடியவில்லை. அப்போது அவரை உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யவில்லை.
ஆனால், அதன் பின் தனது காயத்திலிருந்து மீண்டு வந்த நடராஜன் 2022 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவரது கிரிக்கெட் கேரியரின் சிறந்த பந்துவீச்சு செயல்பாட்டை அப்போது அவர் வெளிப்படுத்தினார். 2022 ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 18 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவரது பந்துவீச்சு சராசரி 22.5 ஆக இருந்தது. அவரது விக்கெட் வீழ்த்தும் ஸ்ட்ரைக் ரேட் 14.33 ஆக இருந்தது.
ஆனாலும் 2022 டி20 உலகக் கோப்பையில் அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதன் பின் அவர் எப்போதும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு எந்த காயமும் இல்லாத நிலையில் அவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை.
அப்போதும் இதே போல சமூக வலைத்தளங்களில் நடராஜனுக்கு முன்பு ஏற்பட்ட காயங்கள் காரணமாக சொல்லப்பட்டன. அடுத்து 2023 ஐபிஎல் தொடரில் அவர் 12 போட்டிகளில் 10 விக்கெட்களை மட்டுமே எடுத்தார். அந்த ஃபார்மை காரணம் காட்டி அதன் பின் அவருக்கு இந்திய அணில் ஒட்டுமொத்தமாக வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மற்ற பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வந்த பின் இந்திய அணியில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். உதாரணத்திற்கு ஹர்திக் பாண்டியா பலமுறை காயத்தில் சிக்கி இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்தவுடன் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார். அதே போலத்தான் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
அதை வைத்துப் பார்த்தால் நடராஜனுக்கு இந்திய அணியில் வேண்டுமென்றே வழங்கப்படவில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. தற்போது 2024 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜன் யார்கர் பந்துகளை துல்லியமாக வீசி வருகிறார். அதன் காரணமாக அவரை 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என பல முன்னாள் முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் சமூக வலைத்தளங்களில் இப்போதும் சிலர் காயத்தின் காரணமாகத்தான் நடராஜன் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை என முட்டுக் கொடுத்து வருவது வேடிக்கையாக உள்ளது.