மும்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ், வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபே மற்றும் ரியான் பராக் ஆகியோர் இடம் பெறவில்லை.
அவர்கள் மூவரும் சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று இருந்தனர். சிவம் துபே காயம் காரணமாக கடைசி நேரத்தில் வங்கதேச டி20 தொடரில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில், இவர்கள் மூவரும் ஏன் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டனர்? என பிசிசிஐ விளக்கம் அளித்து இருக்கிறது.

மயங்க் யாதவ் வங்கதேச டி20 தொடரில் அறிமுகமாகி மூன்று சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவ் நான்கு போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தார். அப்போது அவருக்கு இரண்டு முறை காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி இருந்தார். தற்போது இந்திய அணியில் இடம் பெற்ற பின் வெறும் மூன்று போட்டிகளில் ஆடிய உடன் அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே, நீண்ட கால அடிப்படையில் மயங்க் யாதவால் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்து சிவம் துபேவின் காயம் இன்னும் குணம் அடையாததால் அவரும் டி20 அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி கடந்த வங்கதேச டி20 தொடரில் இடம் பெற்று விளையாடி இருந்தார். ஆனால், அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் தற்போது வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா மட்டுமே டி20 அணியில் இடம் பெற்று இருக்கிறார்.
ரியான் பராக்கிற்கு நீண்ட காலமாக வலது தோள்பட்டையில் காயம் இருந்து வந்தது. அதை சரிப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ சிறப்பு மையத்துக்கு அவர் அனுப்பப்பட்டு இருக்கிறார். அதனால் அவரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது.