டெல்லி: ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் மலேசியாவில் ஜூன் 1 முதல் 11 வரை நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் மலேசியாவைத் தவிர இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து அணிகள் பங்கேற்கின்றன.
ஏழாவது மகளிர் ஆசியக் கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடக்கின்றன. முதல் நான்கு ஆசியக் கோப்பை போட்டிகள் 50 ஓவர்கள் கொண்டதாக நடந்தது. கடைசியாக நடந்த இரண்டு போட்டிகளும் டி-20 போட்டிகளாக நடந்தது.
இதுவரை நடந்துள்ள 6 போட்டிகளிலும் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது ஏழாவது முறையாக இந்தப் போட்டி நடக்க உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உடனான முத்தரப்பு போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் பெரிய மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ருமேலி தர் பதிலாக ராஜேஸ்வரி கெயிக்வாட் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா (துணை கேப்டன்), மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜெமிமா ரோட்ரிகுஸ், அனுஜா பாட்டில், தீப்தி சர்மா, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூனம் யாதவ், ஏக்தா பிஸ்த், ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ரகார், ராஜேஸ்வரி கெயிக்வாட், மோனா மேஷ்ரம்.