குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டிகளில் செய்த முந்தைய பவர் பிளே சாதனையை முறியடித்தது. அதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறிய திட்டத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் செயல்படுத்தியதே முக்கிய காரணமாக அமைந்தது.
வங்கதேச அணிக்கு எதிராக குவாலியரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 128 ரன்கள் என்ற சிறிய இலக்கை சேஸிங் செய்தது. சிறிய இலக்கு என்றாலும் இந்திய அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது. முதல் ஆறு ஓவர்கள் பவர் பிளே என்ற நிலையில் அதற்குள் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களை எட்டியது.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிராக பவர் பிளே ஓவர்களில் இந்தியா அதிகபட்ச ரன் குவித்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி முதல் ஆறு ஓவர்கள் பவர் பிளேவில் 68 ரன்கள் குவித்து இருந்தது. அதுவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச பவர் பிளே ஸ்கோராக இருந்தது.
அந்த சாதனையை இந்திய அணி குவாலியர் டி20 போட்டியில் முறியடித்து இருக்கிறது. இதன் பின்னணியில் கவுதம் கம்பீரின் திட்டம் உள்ளது. கம்பீர் பயிற்சியாளர் பதவியை ஏற்றதில் இருந்து இந்திய அணியை டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடுமாறு வலியுறுத்தி வருகிறார். எந்த ஒரு கட்டத்திலும் நிறுத்தி நிதானமாக ஆடுவது என்ற போக்கே இருக்கக் கூடாது என்பதே அவரது தாரக மந்திரமாக உள்ளது.
அதன்படி இதற்கு முன் இலங்கை அணிக்கு எதிராகவும் இந்திய அணி விக்கெட் வீழ்ச்சி இருந்தாலும் ரன் ரேட் குறையாமல் ஆடி இருந்தது. அதே போல, வங்கதேச அணிக்கு எதிரான இந்த போட்டியிலும் சிறிய இலக்காக இருந்தாலும் விரைவாக சேஸிங் செய்து முடிக்க வேண்டும் என இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கூறினார்.
துவக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா அதை அப்படியே செய்தனர். அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். மூன்றாம் வரிசையில் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். இவர்கள் மூவரின் அதிரடியால் இந்திய அணி பவர்பிளேவில் 71 ரன்களை எட்டி இருந்தது. அதன் பின்னரும் இந்திய அணியின் ரன் குவிக்கும் வேகம் குறையவில்லை.
நிதிஷ் குமார் தனது அறிமுகப் போட்டி என்பதால் பேட்டிங்கில் நிதானமாக ஆடினார். ஆனால், மறுபுறம் ஹர்திக் பாண்டியா சரவெடி ஆட்டம் ஆடினார். அவர் 16 பந்துகளில் 39 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியை 11.5 ஓவர்களில் உறுதி செய்தார்.