டெல்லி: மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஆசிய கிரிக்கெட் அணிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் அணி. இந்த அணியின் வளர்ச்சிக்காக தற்போது இந்திய கேப்டன் கோஹ்லி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இது அந்த அணியினரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது
ஆசிய கண்டத்தில் இருக்கும் கிரிக்கெட் அணிகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் அணி ஆப்கானிஸ்தான் ஆகும். தற்போது இந்த அணி ஹாங்காங்கில் நடைபெறும் கண்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. அணியின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நிலையில் இந்த அணியில் இருக்கும் பல வீரர்கள் கிரிக்கெட் மட்டும் இல்லாமல் வேறு சில பணிகளையும் பகுதி நேரமாக பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த அணி இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போலவே அவர்கள் நாட்டிலும் ஸ்பகிஸா டி-20 என்ற தொடரை நடத்த இருக்கிறது. இந்த நிலையில் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மைதானத்திற்கு வெளியில் வெடிகுண்டு வெடித்தது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி ஆப்கானிஸ்தான் அணிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் "உங்கள் நாட்டில் நடக்க இருக்கும் ஸ்பகிஸா டி-20 போட்டிக்கு வாழ்த்துகள். நீங்கள் எந்த ஒன்றை செய்தாலும் உங்கள் முழு மனதோடு செய்யுங்கள். நீங்கள் விளையாடும் விளையாட்டுக்கு நேர்மையாக இருங்கள் , கண்டிப்பா விரைவில் நீங்கள் உலகின் பெரிய அணியாக மாறுவீர்கள். உங்களுக்கான இடத்தை நீங்கள் விரைவில் பெறுவீர்கள்" என்று கூறியிருந்தார்.
விராட் கோஹ்லியின் இந்த வீடியோவைப் பார்த்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அந்த அணியின் வீரர்கள் அனைவரும் விராட் கோஹ்லியின் இந்த வீடியோவைப் பார்த்து, கோஹ்லிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.