மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட வந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த கிரிக்கெட் தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் அதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி ஜிம்பாப்வே செல்ல உள்ளது. கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றவுடன் ஜிம்பாப்வே தொடரில் இருந்து தனது பணியை துவக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

அதற்கு நேர்மாறாக விவிஎஸ் லக்ஷ்மனை பயிற்சியாளராக அறிவிக்க உள்ளது பிசிசிஐ. ஜிம்பாப்வே தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அந்த தொடரில் இருந்து தான் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது.
கவுதம் கம்பீர் விதிக்கும் கட்டுப்பாடுகள் தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அதாவது அவர் முழு பலத்துடன் கூடிய இந்திய அணிதான் எந்த தொடரிலும் விளையாட வேண்டும் என உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்காகவே டெஸ்ட் அணி, ஒருநாள் அணி, டி20 அணி என மூன்று வெவ்வேறு அணிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் உறுதியாக இருக்கிறார்.
எனவே, இரண்டாம் கட்ட அணி ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவதை அவர் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பை முடிந்து வரும் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஓய்வு எடுப்பார்கள் என்பதால் ஜிம்பாப்வே தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணியே செல்ல உள்ளது.
அதை கம்பீர் விரும்பாததால் விவிஎஸ் லக்ஷ்மன் அந்த தொடருக்கு மட்டும் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இன்னும் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ளாத கவுதம் கம்பீர் அதற்கு முன்பிருந்தே "ரூல்ஸ்" பேசி வருவது இந்திய ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.