மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பயன்படுத்திய ஃபார்முலாவை வரும் 50 ஓவர் உலகக் கோப்பையிலும் இந்தியா பயன்படுத்தினால் நிச்சயம் மண்ணைக் கவ்வி விட நேரிடும்.
இந்திய அணி நேற்று 150 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு தான் விளையாடியது. இதில் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் இசான் கிஷன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

சூர்ய குமார் யாதவ் , திலக் வர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடினாலும் முக்கிய கட்டத்தில் வெளியேறினர். இதனை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் சஞ்சு சாம்சனும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் பேட்டிங் வரிசையில் அக்சர் பட்டேல் தான் ஏழாம் இடத்தில் இருந்தார். அவருக்கு பதில் பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளர்கள் யாருமே இல்லை. இதனால் தான் நேற்று இந்திய அணி தோல்வி அடைந்தது ஒவ்வொரு அணியிலுமே பேட்டிங் தெரிந்த பவுலர்கள் கொஞ்சமாவது இருப்பார்கள்.
அவ்வளவு ஏன் இந்தியாவில் கூட சர்துல் தாக்கூர்,தீபக் சாகர் போன்ற வீரர்கள் எல்லாம் இருந்தனர். ஆனால் நேற்றைய அணியில் அப்படி ஒரு ஆல் ரவுண்டர்கள் கூட தற்போது இல்லை. இதே போன்று தான் உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி களமிறங்க போகிறது. ஜடேஜா ஏழாவது இடத்தில் இறங்கினால் அவருக்கு பிறகு மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு சூழற் பந்துவீச்சாளர் என்று அளவில்தான் பிளேயிங் லெவன் அமைக்கப்பட்டிருக்கும். அப்படி இருந்தால் நிச்சயம் இந்திய அணி பெரிய இலக்கை துரத்துவது மிகவும் கடினமாகிவிடும்.
உதாரணத்திற்கு இன்னும் 50 ரன்கள் இருக்கிறது. கைவசம் 40 பந்துகள் இருக்கிறது.ஆனால் விக்கெட்டுகள் 3 அல்லது 4 தான் இருக்கிறது என்றால் இந்த சூழல் இந்தியாவுக்கு பாதகமாக மாறிவிடும். இதுவே பேட்டிங் வரிசை ஆழமாக இருக்கும் அணியினருக்கு இந்த இலக்கு எட்ட கூடியதாக இருக்கும். இதனால் இந்திய அணி கூடுதல் ஆல்ரவுண்டர்களை கீழ் வரிசையில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளது.
இதன் காரணமாக சர்துல் தாக்கூரை அணியில் சேர்க்கலாம் என கிரிக்கெட் விமர்சனங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் சர்துல் தாக்கூர் அணிக்குள் வந்தால் ஷமி அல்லது சிராஜ் ஆகியோருக்கு இடம் கிடைக்காமல் போய்விடும். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது.