பெங்களூர்: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஏராளமான ஜாம்பவான் வீரர்களின் வாரிசுகள் விளையாடி இருக்கின்றனர். சுனில் கவாஸ்கர் மகன் ரோஹன் கவாஸ்கர், ஸ்ரீகாந்த் மகன் அனிருத் ஸ்ரீகாந்த், ரோஜர் பின்னி மகன் ஸ்டூவர்ட் பின்னி, யோக்ராஜ் சிங் மகன் யுவராஜ் சிங் என்று ஏராளமானோர் விளையாடி இருக்கின்றனர்.
அந்த வகையில் ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அதேபோல் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது மகனை கிரிக்கெட்டில் களமிறக்கி இருக்கிறார்.

18 வயதாகும் சமித் டிராவிட் ஏற்கனவே கர்நாடகாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்துள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் என்பதால் சமித் டிராவிட்டின் பெயர் வேகமாக பரவியது. அண்மையில் யு19 கிரிக்கெட்டில் கூச் பிகார் டிராபியை வென்ற கர்நாடகா அணியில் சமித் டிராவிட்டும் முக்கிய அங்கமாக இருந்தார்.
அதேபோல் லாங்கஷையர் அணி கர்நாடகா வந்த போது, கர்நாடகா பிளேயிங் லெவனில் சமித் டிராவிட்டும் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் தொடரை போல கர்நாடகாவில் டி20 லீக் தொடர் நீண்ட ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த டி20 லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதில் 18 வயதான சமித் டிராவிட்டும் தனது பெயரினை பதிவு செய்திருந்தார்.
இவரை மைசூரு வாரியர்ஸ் அணி ரூ.50 ஆயிரம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய மைசூரு வாரியர்ஸ் அணியின் கேப்டனாக கருண் நாயர் இருக்கிறார். இதே அணியில் தான் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவும் விளையாடி வருகிறார்.
இந்த அணிக்கு சமித் டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டி20 லீக் தொடரில் சமித் டிராவிட் சிறப்பாக செயல்பட்டு கவனத்தை ஈர்க்கும் பட்சத்தில், நிச்சயம் சச்சின் டெண்டுல்கரை மும்பை அணி வாங்கியதை போல ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட்டையும் ஏதாவது ஒரு ஐபிஎல் அணி வாங்கும் என்று பார்க்கப்படுகிறது.