மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரது நியமனம் சரியானதுதானா? என சிலருக்கு கேள்வி இருக்கலாம். இந்திய அணிக்கு இவரை விட சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளர் யாருமே இல்லையா? என்று கேட்டால், உண்மையில் தற்சமயம் இந்திய கிரிக்கெட் அணி இருக்கும் உச்சத்துக்கு, அதை சமாளிக்கக் கூடிய, சரியாக வழிநடத்தக்கூடிய ஒரே நபர் கவுதம் கம்பீர் மட்டுமே.
இரண்டு உலகக் கோப்பைகள் மற்றும் மூன்று ஐபிஎல் கோப்பைகளுக்கு இவர் சொந்தக்காரர். அந்த ஐந்து வெற்றிகளிலும் கவுதம் கம்பீர் பத்தோடு பதினொன்றாக நின்றவர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த ஒவ்வொரு வெற்றிகளிலும் அவர் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார். 2007 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் கவுதம் கம்பீர் துவக்க வீரராக சிறப்பாக செயல்பட்டார். இறுதிப் போட்டியில் 75 ரன்கள் அடித்து உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அடுத்து 2011 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கி, சச்சின், சேவாக், விராட் கோலி ஆகியோரின் விக்கெட் வீழ்ச்சியின் அழுத்தத்துக்கு நடுவே 97 ரன்கள் குவித்து இருந்தார். அவர் அமைத்த அடித்தளத்தில் தான் அன்று இந்தியா உலகக் கோப்பை வென்றது.
அடுத்து 2012 மற்றும் 2014 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக வென்றார். அந்த காலகட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி தலைமையில் ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இரண்டு முறை கோப்பை வென்று இருந்தது. இந்த நிலையில் அதற்கு ஈடு கொடுத்து கொல்கத்தா அணியை வழி நடத்தி இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்தார் கவுதம் கம்பீர்.
அடுத்து 2024 ஐபிஎல் தொடரில் அதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர், அந்த அணியின் வீரர்களுக்கு ஊக்கம் அளித்து, அவர்களின் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தார். இந்த முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை வென்ற மூன்று ஐபிஎல் கோப்பைகளிலும் கவுதம் கம்பீர் ஆணி வேராக இருந்துள்ளார். இந்த சாதனைகளை எல்லாம் செய்த கவுதம் கம்பீர், தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் ஆடுகளத்தில் ஆக்ரோஷமான ஒரு நபர் ஆவார். அவர் கிரிக்கெட் ஆடிய போது பல வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால், அவையெல்லாம் வெற்றிக்காக போராட வேண்டும் என்று அவரது குணத்தின் ஒரு பகுதி தான். அதன் காரணமாகவே அவர் இத்தனை கோப்பைகளை வென்று இருக்கிறார் என்பதும் உண்மை.
தற்போதைய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தங்களின் கடைசி சில ஆண்டுகளில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க வேண்டும். அடுத்த கேப்டனை உருவாக்க வேண்டும். இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த கவுதம் கம்பீரை விட வேற சிறந்த நபர் யாருமே இல்லை.