மும்பை:உலக கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி இன்று அதிகாலை இங்கிலாந்து கிளம்பிச் சென்றது.
12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் இப்போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் மோத வேண்டும்.

இந்திய கேப்டன் கோலி பங்கேற்கும் 3வது உலக கோப்பை இதுவாகும். வரும் 25ம் தேதி நியூசிலாந்துடனும், 28ம் தேதி வங்கதேசத்துடன் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. எனவே, புதன்கிழமை அதிகாலையில் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து கிளம்பிச்சென்றது.
அனைத்து வீரர்களும் கோட் சூட்டுடன் கிளம்பிச் சென்றனர். அதிகாலையிலும் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வாழ்த்து சொல்லி இங்கிலாந்துக்கு அனுப்பினர். மும்பையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக இந்திய வீரர்கள் லண்டன் சென்றனர்.
இந்திய அணி கபில்தேவ் தலைமையில் 1983ம் ஆண்டும், தோனி தலைமையில் 2011ம் ஆண்டும் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றுள்ளது. தற்போது 3வது முறையாக உலக கோப்பையை வெல்ல விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது. மீண்டும் ஒருமுறை கோப்பையை வென்று இந்தியாவை உலக சாம்பியன் ஆக்குவாரா? விராட் கோலி என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.