சிட்னி: புத்தாண்டு தினத்தை ஒட்டி ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தனது சிட்னி இல்லத்தில் இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இதில் இந்திய அணியின் டோணி கலந்து கொள்ளவில்லை.
ஜனவரி 6-ஆம் தேதி சிட்னியில் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான பயிற்சியில் இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று புத்தாண்டு தினம் கொண்டாடப் பட்டதையடுத்து இருநாட்டு வீரர்களுக்கும் சிட்னியில் உள்ள தனது இல்லத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்திற்கு இந்திய வீரர்கள் ஊதா கலர் டீம் இந்தியா டி-சர்ட் மற்றும் கால்சட்டைகளுடன் வந்திருந்தனர்.
இரு அணி வீரர்களும் விருந்துக்குப் பிறகு பிரதமர் டோனி அபாட்டுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அணி வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் சேர்ந்து டோனி அபாட் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டோனி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.