
பெரும் எதிர்பார்ப்பு
இத்தொடர் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ.. ராகுல் டிராவிட் இத்தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் என்பதால், ரசிகர்கள் மிக ஆவலுடன் போட்டிகளை எதிர்நோக்கியுள்ளனர். இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் ஜூலை 13ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மும்பையில் 14 நாட்கள் பயோ பபுளில் இருந்த ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூன் 28ம் தேதி இலங்கை புறப்பட்டது. அங்கு தற்போது இந்திய அணி வீரர்கள் பயோ-பபுளில் உள்ளனர்.

ஒருமுறை கூட
இத்தொடருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ராகுல் டிராவிட். இத்தொடர் இந்திய அணியின் செயல்பாட்டை கண்டறிவதற்கு மட்டும் முக்கியமான சீரிஸ் கிடையாது. இந்திய அணியின் எதிர்கால பயிற்சியாளரை அடையாளம் காணும் தொடராகவும் அமையவுள்ளது. விராட் கோலிக்கு நெருக்கமான ரவி சாஸ்திரி அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் பதவியேற்றதில் இருந்து இந்திய அணி இதுவரை ஒருமுறை கூட ஐசிசி முக்கிய டைட்டில்களை வென்றதில்லை. அதாவது, 2019 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆகிய இரு தொடரிலும் இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது.

கோப்பை வசமானது
அதேசமயம், தற்போது இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இன்று இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக வலம் வரும் பல வீரர்களை தேடிக் கண்டுபிடித்து செதுக்கியவர் டிராவிட் தான். ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில், ரியான் பராக், ஷ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மாயங்க் அகர்வால், கம்லேஷ் நாகர்கோட்டி என்று இவர் விதைத்த விதைகள் ஏராளம். அதுமட்டுமின்றி, இவரது பயிற்சியின் கீழ், 2016ல் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, 2018ல் கோப்பையைக் கைப்பற்றியது.

விரைவில் வீடியோ
இதனால், இந்த இலங்கை தொடரில், ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ், இந்திய அணி விளையாட உள்ளதால், இத்தொடர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதற்காக, அவர் சில வியூகங்களை வகுத்து அணியை வழிநடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது குவாரன்டைனில் உள்ள இந்திய அணி வீரர்கள், நீச்சல் குளத்தில் சிறிது நேரம் பொழுதை போக்கி மகிழ்ந்தனர். இதுகுறித்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதன் வீடியோவையும் விரைவில் வெளியிட உள்ளதாக பிசிசிஐ பதிவிட்டுள்ளது.

விட்டு விளாசிய டிராவிட்
இந்நிலையில், அணியின் ஆலோசனை கூட்டங்களில், சில இளம் மற்றும் சீனியர் வீரர்கள் சற்று மெத்தனமாக இருந்ததாக தெரிகிறது. முதலில் இதுகுறித்து, மௌனம் காத்த டிராவிட், பிறகு மெல்ல மெல்ல வீரர்களிடம் இதுகுறித்து அட்வைஸ் செய்திருக்கிறார். அதன் பிறகும், சில வீரர்கள் சற்று மெத்தனமாகவே இருக்க, பொரிந்து தள்ளிவிட்டாராம் கோச் ராகுல் டிராவிட். அணியின் நீடிக்க விரும்பும் வீரர்கள் இங்கிருக்கலாம்.. மீதமுள்ளவர்கள் போய் படுத்து தூங்கலாம் என்று கர்ஜிக்க, சீனியர் வீரர்கள் உட்பட அனைவரும் பம்மிவிட்டார்களாம்.


Click it and Unblock the Notifications











