மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் தனது அபாரமான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் பயமற்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், தற்போது ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அபிஷேக்கின் இந்த அதிரடி வளர்ச்சியைக் கண்டு அணியின் சக வீரரான விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அவரை வேடிக்கையாகக் கலாய்த்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய சஞ்சு சாம்சன், அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் அபிஷேக் சர்மாவுக்கு இருக்கும் வரவேற்பு குறித்து நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டார். "முன்பெல்லாம் அபிஷேக் சர்மாவுக்கு மைதானத்தில் ரசிகர்கள் கொடுக்கும் உற்சாகத்தைப் பார்த்து மற்ற வீரர்கள் பொறாமைப்படுவார்கள். எங்கு பார்த்தாலும் அபிஷேக், அபிஷேக் என்ற சத்தம் தான் கேட்கும். மக்கள் இவரைத் தவிர வேறு யாரையும் பார்க்கவில்லையா? என்று நாங்கள் பேசிக்கொள்வோம்" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து அபிஷேக்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய சாம்சன், "அவர் இப்போது அணியின் சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார். தம்பி, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ" என்று அவரை வேடிக்கையாக வம்பிழுத்தார்.
தன்னுடைய எதிர்கால இலக்கு குறித்துப் பேசிய அபிஷேக் சர்மா, "இந்திய அணிக்காக அனைத்து வடிவங்களிலும் விளையாடுவதுதான் எனது லட்சியம். ஆனால், என் கையில் இல்லாத விஷயங்களை நினைத்து நான் கவலைப்படுவதில்லை. எனது குரு யுவராஜ் சிங் எனக்குக் கற்றுக்கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி, விளையாடும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவது எனது கனவு" என்று தெரிவித்தார்.

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அதிரடி அரைசதம் விளாசி அசத்திய அபிஷேக், தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அவர் தனது கடின உழைப்பின் மூலம் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
