இந்த 4 பவுலர்களை இந்திய அணியில் சேர்க்கனும்.. கம்பீர் முடிவு தவறு.. அஸ்வின், பிரசன்னா கருத்து
மும்பை: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நான்கு அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் கம்பீர் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட்டை ஒருமுறை கூட ஆட்டமிழக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறினர். குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் பும்ரா இல்லாத நிலையில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்திருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் பிரசன்னா, கம்பீரின் முடிவுகளை கடுமையாக சாடினார். ஐசிசி தொடர்களை மட்டும் வென்றால் போதும் என கம்பீர நினைத்தால் அது மிகவும் தவறு என்று சாடிய பிரசன்னா, உலகக்கோப்பை தொடரை மட்டும்தான் வெல்ல வேண்டும் என்று நினைத்தால் அந்த தொடருக்கு மட்டும் பயிற்சியாளராக வாருங்கள்.
மற்ற நேரத்தில் வீட்டிலே அமர்ந்து ஓய்வில் இருங்கள் என்று கூறியுள்ளார். அணியில் இருக்கும் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமே தவிர ஸ்டார் வீரர்களை ஒழிக்க கூடாது என்று அஸ்வின் கூறினார். ரோகித் சர்மாவுக்கு கிடைக்கும் அதே முக்கியத்துவம் குல்தீப் யாதவிற்கும் வழங்க வேண்டும் அதுதான் சரியான முறையே தவிர ஸ்டார் வீரர்களை இருக்கக்கூடாது என்று நினைப்பது தவறு என்று அவர் சாடியுள்ளார்.
ரோகித், விராட் கோலி போன்ற வீரர்கள் விளையாடுவதை பார்க்க தான் ரசிகர்கள் வருவதாகவும் 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக வெற்றிகளை தேடி தந்து தான் இந்த வீரர்கள் எல்லாம் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதாகவும் அஸ்வின் சுட்டிக்காட்டினார். ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஓய்வு பெற்றால் அந்த இடத்திற்கு கில் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஸ்டார் அந்தஸ்தை பெறுவார்கள் என்றும் அஸ்வின் சுட்டிக்காட்டினார்.
அந்த விவாதத்தில், 50 ஓவர் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னா, அந்த காலகட்டத்தில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும் பந்து நன்றாக ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்திய அணியில் முகமது சமி, முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகிய நான்கு வீரர்களையும் அணியில் வைத்திருக்க வேண்டும் என்றும் சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பிரசன்னா சுட்டிக்காட்டினார்.
பிரசன்னாவின் இந்த கருத்தை வரவேற்ற அஸ்வின் இந்த வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து அணியை தயார் செய்ய வேண்டும் என்றும் கூடுதலாக பிரசித் கிருஷ்ணாவை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இன்னும் ஒரு ஆண்டுகள் தான் உலகக் கோப்பை க்கு காலம் இருப்பதாகவும் இந்த காலத்தில் புதிய வீரர்களை தயார் செய்வது கடினம் என்றும் அஸ்வின் சுட்டிக்காட்டினார்.


Click it and Unblock the Notifications

