மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் முக்கிய ஸ்பான்சராக இடம்பிடித்திருந்த 'டிரீம்11' நிறுவனம், திடீரென தனது ஒப்பந்தத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளது. இதனால், அடுத்த ஸ்பான்சரைத் தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால், இம்முறை தொகை விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லை என்பது போல, சுமார் 450 கோடி ரூபாயை புதிய இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுத் தளமான டிரீம்11, இந்திய அணியின் முக்கிய ஸ்பான்சராக மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 358 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான புதிய மசோதா நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாக, அந்த நிறுவனம் தனது ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த திடீர் விலகல், ஆசியக் கோப்பை தொடர் நெருங்கும் வேளையில் பிசிசிஐ-க்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

டிரீம்11 வெளியேறியதால் சற்றும் தளராத பிசிசிஐ, அடுத்த ஸ்பான்சருக்கான தொகையை இன்னும் அதிகரித்து, புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது. என்டிடிவி வட்டாரங்களின் தகவல்படி, 2025 முதல் 2028 வரையிலான காலகட்டத்திற்கு புதிய ஸ்பான்சரை இழுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இந்திய அணி விளையாட உள்ள சுமார் 140 போட்டிகளுக்கும் சேர்த்து, ஸ்பான்சர்ஷிப் தொகையாக சுமார் 450 கோடி ரூபாயை பிசிசிஐ எதிர்பார்க்கிறது. இது டிரீம்11 கொடுத்த தொகையை விட கணிசமாக அதிகம். இந்த ஒப்பந்தம், இந்திய அணி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விளையாடும் இருதரப்புத் தொடர்கள் மற்றும் ஐசிசி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) நடத்தும் தொடர்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
மேலும், இருதரப்புத் தொடரில் ஒரு போட்டிக்கு ரூ. 3.5 கோடியும், ஐசிசி மற்றும் ஏசிசி தொடர்களில் ஒரு போட்டிக்கு ரூ. 1.5 கோடியும் ஸ்பான்சர்ஷிப் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்குள் புதிய ஸ்பான்சரைப் பிடித்து, வீரர்களுக்கான புதிய ஜெர்சியைத் தயாரிப்பது என்பது பெரும் சவாலான காரியம். இதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வரும் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கும் மகளிர் உலகக் கோப்பைக்கு முன்பாக புதிய ஸ்பான்சரை நிச்சயம் உறுதி செய்துவிடுவோம் என பிசிசிஐ நம்பிக்கையுடன் உள்ளது.
எனவே, இந்திய அணியின் ஜெர்சியை அலங்கரிக்கப் போகும் அந்த 450 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய நிறுவனம் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. டொயோட்டா கார் நிறுவனம் இந்திய அணி ஜெர்சியில் விளம்பரம் செய்ய விருப்பம் தெரிவித்ததாக சில நாட்கள் முன்பு செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.