நாட்டிங்காம் : இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பின், இந்திய அணி இன்னும் பயிற்சிகளை தொடங்கவில்லை என்ற செய்தி வந்துள்ளது. மூன்றாவது போட்டி நடக்கும் நாட்டிங்காம் நகருக்கு புதன்கிழமை சென்ற இந்திய அணியினர், வியாழன் முதல் தான் பயிற்சிகளை தொடங்க உள்ளனர் என கூறப்படுகிறது. அதுவும் மொத்தம் இரண்டு அமர்வுகள் மட்டுமே நடைபெறும் என தெரிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது போட்டி முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இந்திய வீரர்களின் மோசமான பேட்டிங் கடும் அதிர்வலைகளை எழுப்பியது. பல முன்னாள் வீரர்கள், பயிற்சிகள் மற்றும் தயார் நிலையில் தான் பிரச்சனை என குறிப்பிட்டனர். குறிப்பாக, இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னர் அதிக பயிற்சியில் ஈடுபடவில்லை. மாறாக ஐந்து நாட்கள் ஒய்வு பெற்றனர். பின்னர், ஒரே ஒரு பயிற்சி போட்டியில் ஆடினர். அந்த பயிற்சி போட்டியின் நாட்களை நான்கில் இருந்து மூன்றாக குறைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த போட்டியில் 18 இந்திய வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்கியது அதன் முக்கியத்துவத்தை குறைத்தது. இப்படி, முழுமையான பயிற்சிகள் அற்ற நிலையில் ஆடிய இந்திய அணி, முதல் டெஸ்டில் கோஹ்லியின் பேட்டிங், அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சு ஆகியவற்றால் வெற்றிக்கு அருகில் வந்து, ஒரு கௌரவமான தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியும் பல தவறுகளைச் செய்தது இந்திய அணிக்கு சாதகமாக முடிந்தது. ஆனால், இரண்டாம் போட்டியில் இங்கிலாந்து அணி ஓரளவு சுதாரித்தது. இந்திய அணியோ மொத்தமாக கவிழ்ந்தது. பேட்டிங்கில் படுமோசமாக 107 மற்றும் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த தோல்விக்குப் பின் பலரும் கடுமையான பயிற்சிகள் மூலமே இந்திய அணி மீள முடியும் என கவாஸ்கர், கங்குலி, பாய்காட் உள்ளிட்ட பலர் கூறியும், இந்திய அணி பயிற்சியில் ஈடுபடவில்லை என்பது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோஹ்லி, வீரர்களின் மனதில் தான் மாற்றம் ஏற்பட வேண்டும், அவர்களின் ஆட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்ற எண்ணத்தில் இருப்பதால் தான், பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.