இந்திய அணி 2026 டி20 உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில் நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கடந்தகாலத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்களைப் பெருமைப்படுத்தும் திறந்தவெளி பேருந்து மூலம் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அப்படி ஒரு கொண்டாட்டம் தற்போது நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும், எங்கு நடக்கும், நேரம் மற்றும் அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இந்திய அணிக்கு ஐசிசி கோப்பைகளில் மிகப்பெரிய வரலாறு உண்டு. 1983, 2011 ஒருநாள் உலகக்கோப்பைகள், 2013, 2025 சாம்பியன்ஸ் டிராபிகள், அத்துடன் 2007, 2024, 2026 டி20 உலகக்கோப்பைகள் என பலமுறை வென்றுள்ளது. இந்த வெற்றிகள் பெரும்பாலும் உற்சாகமான பேருந்துப் பேரணிகளால் கொண்டாடப்பட்டுள்ளன.

இந்திய அணி தனது வெற்றிகளைப் பேரணியாகக் கொண்டாடியுள்ளது. 2007இல் முதல் டி20 கோப்பையை வென்றபோது, மும்பையில் கேப்டன் எம்.எஸ். தோனி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் கோப்பையை ஏந்திச் சென்றார். 2024 டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னரும் மும்பை நகரில் பேரணி நடைபெற்றது. வான்கடே ஸ்டேடியத்தில் நிறைவடைந்த அந்த நிகழ்வு, விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஓய்வறிவிப்பால் ரசிகர்கள் பிரியா விடை அளித்தனர்.

தற்போதைய 2026 வெற்றிப் பேரணிக்கான நகரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், மும்பையில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பயண அட்டவணை இறுதி செய்யப்படவில்லை. 2024 ஆம் ஆண்டை ஓப்பிட்டு பார்த்தால், வீரர்கள் முதலில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பின்னரே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். பேரணி ஏற்பாடு செய்யப்பட்டால் அது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ஆனால், பிசிசிஐ இப்படி யோசிப்பதற்கு முக்கிய காரணம், பாதுகாப்பு அம்சங்கள் தான். கடந்த ஆண்டு ஜூன் மாதம், பெங்களர் சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்ற கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது போல் மீண்டும் ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்று பிசிசிஐ அச்சத்தில் உள்ளது.