ராஞ்சி போட்டியில் ராணுவ தொப்பி…ஒருநாள் ஊதியம் நன்கொடை… இந்திய அணிக்கு ஒரு சல்யூட்
ராஞ்சி:காஷ்மீரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி நிதியுதவி அளித்திருப்பது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
அதே சமயம் வீரமரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறன. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்வந்துள்ளனர்.

தொகை வழங்கப்படும்
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடக்க விழாவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை, புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ராஞ்சி ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

ஆட்ட ஊதியம்
அவர் கூறியதாவது: இந்த 3-வது ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் ஆட்ட ஊதியம் முழுவதையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிறோம். அதன்மூலம் தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவமுடியும் என்று கூறினார்.

ராணுவ தொப்பி அணிந்தனர்
மேலும் இந்த ஆட்டத்தில், இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை தரும் விதமாக இந்திய அணி வீரர்கள் ராணுவத் தொப்பியை அணிந்தனர். தொப்பியை அனைத்து வீரர்களுக்கும் தோனி வழங்கினார்.

கருப்புப் பட்டையுடன் விளையாடினர்
வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டையணிந்து அஞ்சலி செலுத்தினர். இந்திய அணியின் தேசபக்தி மிகுந்த இந்த செயல், அனைத்து தரப்பினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications