மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் வருகிறது. அதே சமயம், சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் சுமாராகவே பேட்டிங் செய்து வருகிறார். அவரது பேட்டிங் சராசரி 35 என்ற அளவிலேயே இருக்கிறது. மேலும், வெளிநாட்டில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் ரவி சாஸ்திரி, சுப்மன் கில்லை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடும் வாதத்தை முன்வைத்துள்ளார். சுப்மன் கில் வெளிநாட்டில் ரன் குவிக்கவில்லை என சொல்லும் முன் உங்கள் ரெக்கார்டை பாருங்கள் என மற்ற முன்னாள் வீரர்களை விளாசி இருக்கிறார். இது குறித்து ரவி சாஸ்திரி பேசியதாவது:
"சுப்மன் கில் வெளிநாட்டில் ரன் குவிக்கவில்லை என்று பலரும் பேசுகிறார்கள். அவர் எப்போதும் வெளிநாட்டில் ரன் குவிக்கவில்லை என்பது ஒரு விவாதமாகவே நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள் உங்களுடைய சொந்த ரெக்கார்டை முதலில் பாருங்கள். வெளிநாட்டில் நீங்கள் எத்தனை ரன்களைச் சேர்த்திருக்கிறீர்கள் என்று நான் அந்த விமர்சகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 'வெளிநாடு, வெளிநாடு' என்று சொல்லாமல் அவரை விளையாட விடுங்கள். அவர் வெளிநாட்டில் ரன் குவிப்பார். அவர் தரமான வீரர்.

அவர் இன்னும் 10 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார். அவர் நிச்சயமாக ஏதோ ஒரு தொடரில் அபாரமாக ரன் குவிப்பார். அதை அவர் தனது துவக்க காலத்தில் செய்யாமல் இருந்திருக்கலாம், ஆனால் இப்போது செய்வார். சுப்மன் கில் நன்றாகவே விளையாடி வருகிறார். அவரை நாம் நீண்ட காலம் தயார் செய்திருக்கிறோம்.
இப்போது அவருக்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். அவருக்கு 25, 26 வயதுதான் ஆகிறது. அவருக்கு இன்னும் நாம் நேரம் அளிக்க வேண்டும். ரிஷப் பண்ட்டுக்கும் நேரம் அளிக்க வேண்டும். இவர்கள் இருவரும் தனித்துவமானவர்கள். ஏனெனில், அவர்களது வயதை வைத்துப் பார்த்தால் இன்னும் பத்து ஆண்டுகள் அவர்களால் கிரிக்கெட் விளையாட முடியும்.
எனவே, அவர்கள் கற்றுக் கொள்ளட்டும். அவர்கள் இப்போது கேப்டன்களாக ஐபிஎல் தொடரில் அனுபவத்தைப் பெற்று வருகிறார்கள். அது நிச்சயம் அவர்களது ஆட்டத்தில் மாற்றத்தை உண்டாக்கும்" இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.