பிர்மிங்காம்: இந்திய டெஸ்ட் அணியில் பின்வரிசை வீரர்களுக்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடும் அழுத்தம் கொடுத்துள்ளார். அவர்கள் அனைவரும் வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் பேட்டிங் செய்தனர். இதன் மூலம் இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் ரன் குவித்தே ஆக வேண்டும் என்று அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி எடங்கி மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதல் போட்டியில் இந்திய அணியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பின்வரிசை வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. ஒரு வீரர் கூட 20 ரன்கள் கூட எடுக்கவில்லை. இது பெரிய பின்னடைவாக அமைந்தது. நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்ந்து ரன் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருந்தனர்.
அந்தப் போட்டியில் இந்திய அணி 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 800 ரன்கள் குவித்த போதும் இந்திய அணி வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில், பேட்டிங்கிற்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் பின்வரிசை வீரர்கள் சேர்ந்து 30 அல்லது 40 ரன்கள் எடுத்திருந்தால், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இந்திய அணி 60 முதல் 80 ரன்கள் வரை எடுத்திருக்க முடியும். அது அந்தப் போட்டியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். அதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது.
இந்த நிலையில் தான் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு முகமது சிராஜுக்கு தனியாக பேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர் பேட்டிங்கில் இதுவரை குறிப்பிடத்தக்க அளவு ரன் சேர்த்ததில்லை. எனவே அவருக்கு அடிப்படை பேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல, மற்ற பந்துவீச்சாளர்களும் வலைப்பயிற்சியில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்கு பேட்டிங் பயிற்சியை எடுத்துக் கொண்டனர். இது அவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பந்துவீச்சில் இந்திய அணியின் பவுலர்கள் சொதப்பி இருக்கின்றனர். தற்போது அவர்கள் பேட்டிங்கிலும் ரன் சேர்க்க வேண்டும் என்று அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் எத்தனை ரன் குவிக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.