சிட்னி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ஜேசன் கில்லெஸ்பி இந்திய அணிக்கு பயிற்சியாளராக வருவது குறித்து அளித்த பதில் இணையத்தில் பரவி வருகிறது.
சொந்த மண்ணில் அடுத்தடுத்து இரண்டு 'வைட்வாஷ்' தோல்விகள், ஆஸ்திரேலியாவில் மண்ணைக் கவ்வியது என இந்திய டெஸ்ட் அணி திணறி வரும் நிலையில், கில்லெஸ்பியின் இந்த பதில் இந்திய ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஜேசன் கில்லெஸ்பி சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது இந்திய ரசிகர் ஒருவர், "ஜேசன், நீங்கள் இப்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர வேண்டும். ஏனென்றால் இந்திய அணி தோற்பது மட்டுமல்லாமல், சொந்த மண்ணிலேயே இரண்டு முறை வைட்வாஷ் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு உங்கள் உதவி தீவிரமாக தேவை" என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த கில்லெஸ்பி, வளவளவென்று பேசாமல் நச்சுன்னு இரண்டே வார்த்தையில் முடித்துவிட்டார். "No thanks" (வேண்டாம்ப்பா சாமி.. ஆள விடுங்க) என்பது போல அவர் பதிலளித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா வெற்றிகளை குவித்து வருகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பையை வென்று அசத்தியது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது.
கம்பீர் தலைமையில் இந்தியா இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. ஆனால் 10 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகளில் டிராவையும் சந்தித்துள்ளது. நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகச் சொந்த மண்ணில் 'வைட்வாஷ்' தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 1-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் போன்ற ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது அணிக்குப் பெரிய பின்னடைவாக மாறியது.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில், வெறும் 124 ரன்களைக் கூட சேஸ் செய்ய முடியாமல் இந்தியா தோற்றது ரசிகர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அடுத்த போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, டெஸ்ட் வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்தது. கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக விலகியதும், ரிஷப் பண்ட் கேப்டன்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் அணி மீதான அதிருப்தியால் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மனை டெஸ்ட் அணி பயிற்சியாளராக வர விருப்பமா? என பிசிசிஐ கேட்டதாக ஒரு செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தியை பிசிசிஐ செயலாளர் சைக்கியா மறுத்துள்ளார். ஆனால், பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து அது குறித்து தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே தான் கில்லெஸ்பி இந்திய அணியின் டெஸ்ட் பயிற்சியாளராக வாய்ப்பு கிடைத்தால் கூட "வேண்டாம்பா சாமி" என குறிப்பிட்டு இருக்கிறார்.
கில்லெஸ்பி இப்படி சொல்ல இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய குழப்பமான சூழல் மட்டும் காரணம் இல்லை. அவர் சில மாதங்கள் முன் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். அப்போது அங்கு நடந்த உள் அரசியலால் மனம் துவண்டு பயிற்சியாளர் பதவியில் இருந்து பாதியில் விலகினார். எனவே, ஆசிய அணிகளுக்கு பயிற்சியாளராக விருப்பம் இல்லை என்பதையும் அவர் இவ்வாறு கூறி இருக்கலாம்.
டெஸ்ட் கிரிக்கெட் கவலையைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, இந்தியா இப்போது டி20 உலகக்கோப்பைக்குத் தயாராகி வருகிறது. பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா களமிறங்குகிறது.