மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கானுக்கு இடமளிக்கப்படவில்லை. அதே சமயம், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சர்பராஸ் கான் கருண் நாயரை விடச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே 'இவர் வெளிநாடுகளில் விளையாட மாட்டார்' என்ற முடிவுகளை எடுக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கிறார் சஞ்சய் மஞ்சுரேக்கர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில், அத்தொடர் ஜூன் 20 முதல் தொடங்க உள்ளது.

இந்தத் தொடருக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், சுப்மன் கில் தலைமையிலான புதிய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சர்பராஸ் கானுக்கு இடமளிக்கப்படவில்லை. அவர் விராட் கோலி இடத்தில் விளையாடுவார் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்.
இதுபற்றி சஞ்சய் மஞ்சுரேக்கர் பேசுகையில், "சர்பராஸ் கான் பற்றி நாம் பேசுவோம். அவர் இந்திய மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மூன்று அரை சதம் மற்றும் 150 ரன்கள் எடுத்திருக்கிறார். நான்கு இன்னிங்ஸ்களில் சரியாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த நிலையில் அவரை அணியிலிருந்து நீக்கியதற்கு அவரது செயல்பாடு காரணம் இல்லை."
"அணி நிர்வாகத்தில் இருக்கும் யாரோ ஒருவர் அவரால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ரன் குவிக்க முடியாது, ஆனால் கருண் நாயரால் ரன் குவிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அவர் சமீபத்தில் ஆடிய ஆட்டத்தை எல்லாம் விட்டுவிட்டு, அவரை இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்."
"நிச்சயமாக அவரது செயல்பாடு கருண் நாயரின் செயல்பாட்டை விடச் சிறப்பானது. கௌதம் கம்பீரின் பயிற்சியில், ரோகித் சர்மா அணியில் இல்லாத நிலையில், தற்போது இருக்கும் அணி நிர்வாகம் அணிக்குத் தேர்வு செய்யும்போது வீரர்களின் செயல்பாட்டைப் பற்றி முன்கூட்டியே அனுமானிப்பதாகத் தெரிகிறது. போட்டி சூழ்நிலை மற்றும் எதிரணியை மனதில் வைத்து அவர்கள் தேர்வு செய்கிறார்கள்," என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியிருக்கிறார்.