லண்டன்: இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனைத் தேர்வு செய்வதில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில், சுப்மன் கில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணித் தேர்வின் போது அவர் தனது கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பொதுவாக, அணித் தேர்வில் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் ஆலோசித்து முடிவுகளை எடுப்பார்கள்.

ரோகித் சர்மா கேப்டனாக இருந்தபோது தனது கருத்துக்களை கூறுவார். அதேபோல, புதிய கேப்டனான கில்லும் அணித் தேர்வு குறித்து சில கருத்துக்களைப் பரிமாறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசையில் யாரை இறக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத நிலையில், ரோகித் சர்மா இறங்கிய துவக்க வீரர் வரிசையில் கே.எல். ராகுலை ஆட வைப்பது எனவும், விராட் கோலி பேட்டிங் செய்த நான்காம் வரிசையில் சுப்மன் கில்லை பேட்டிங் செய்ய வைப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. அப்படி எனில், சுப்மன் கில் இதுவரை பேட்டிங் செய்து வந்த மூன்றாம் வரிசையில் யாரை ஆட வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருண் நாயர் மீண்டும் அணிக்கு வந்திருந்தாலும், அவரை நடுவரிசையில் ஆட வைக்கலாம் என முடிவு செய்திருந்தனர். அவர் ஐந்தாம் வரிசையில் இறங்கக்கூடும். இந்த நிலையில், மூன்றாம் வரிசைக்கு அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் சாய் சுதர்சன் என இரண்டு வீரர்களை வைத்து சுப்மன் கில் மற்றும் கெளதம் கம்பீர் வாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
கெளதம் கம்பீர் அபிமன்யு ஈஸ்வரனைத்தான் மூன்றாம் வரிசையில் இறக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், குஜராத் டைட்டன்ஸ் அணியில் தன்னுடன் சிறப்பாக பேட்டிங் செய்த சாய் சுதர்சனைத்தான் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வைக்க வேண்டும் என சுப்மன் கில் வாதிட்டு இருக்கின்றனர்.
முதலில் சாய் சுதர்சன் இந்திய டெஸ்ட் அணியிலேயே தேர்வு செய்யப்படவில்லை. அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்பதோடு, அவர் மூன்றாம் வரிசையில் ஆட வைக்க வேண்டும் என சுப்மன் கில் வாதிட்டு இருந்தார். இதன் முடிவில் சாய் சுதர்சனை உத்தேச வீரராக சேர்ப்பது என்ற முடிவு மட்டும் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பின் அபிமன்யு ஈஸ்வரன் இந்தியா 'ஏ' அணியில் இடம் பெற்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடினார். அவர் ஒவ்வொரு போட்டியிலும் தலா ஒரு அரைசதம் அடித்திருந்தார். அதிலும், இரண்டாவது போட்டியில் 80 ரன்கள் குவித்து இந்தியா 'ஏ' அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். இந்த சாதகமான அம்சங்களால் அவரே இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் மூன்றாம் வரிசையில் இறங்குவார் என கூறப்படுகிறது.
சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் விளையாடியதால், அவரால் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாட முடியவில்லை. இந்த காரணத்தால் தற்போது சாய் சுதர்சன் மாற்று வீரராக வெளியே உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் இந்த பேட்டிங் வரிசை குறித்த இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.