மும்பை: இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலியின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து பெரும் குழப்பம் நிலவி வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் கோலியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து, இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் சமீபத்தில் அவரைத் தொடர்பு கொண்டு பேச முயன்றதாகவும், கோலி தரப்பிலிருந்து முறையான தகவல் தொடர்பு இல்லாததால் இந்திய அணி நிர்வாகம் குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வரும் அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை. கோலி தரப்பிலிருந்து முறையான தகவல் தொடர்பு இல்லாததால் அணி நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும், இந்த மாத இறுதியில் கான்பூரில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாட அணி நிர்வாகம் விரும்பியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அணியில் இருவரது பெயரும் இடம்பெறவில்லை.
கோலியைப் போலவே, ரோஹித் சர்மாவும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 2025 ஐபிஎல் தொடருக்குப் பிறகு இருவரும் எந்தவொரு போட்டி கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியே, அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக விளையாடிய கடைசிப் போட்டியாகும்.
தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு, பிசிசிஐ தனது ஒப்பந்த வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வுகளை நடத்தியது. ரோஹித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்று தேர்வில் பங்கேற்றார். தற்போது தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வரும் விராட் கோலி, அங்கிருந்தே உடற்தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, மற்றொரு மூத்த வீரரான ஸ்ரேயாஸ் ஐயர், தனது உடல் நீண்ட வடிவ கிரிக்கெட்டில் விளையாட ஒத்துழைக்கவில்லை என்று கூறி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்குக் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 'ஏ' அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த அவர், போட்டியிலிருந்து விலகி வீடு திரும்பினார்.