பெங்களூரு: இன்னும் ஓரிரு வாரங்களில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் பேட்டிங் பயிற்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடினார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற போது, கேஎல் ராகுல் காலில் காயம் ஏற்பட்டது. சரியாக நடக்கக் கூட முடியாமல் சக வீரர்களிடன் உதவியுடன் ஓய்வறைக்கு சென்றார்.

அதன்பின்னர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் கேஎல் ராகுலால் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து கேஎல் ராகுலுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பின்னர் நீண்ட வாரங்களாக ஓய்வில் இருந்த கேஎல் ராகுல், உடல் தகுதி பெறுவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கியில் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே தேசிய கிரிக்கெட் அகாடமியில் நீண்ட நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் கேஎல் ராகுல் இணைந்து பயிற்சியை தொடங்கினார். காயத்தில் இருந்து குணமடைந்தாலும், பேட்டிங் பயிற்சியை தொடங்கும் அளவிற்கு கேஎல் ராகுல் உடல்தகுதியை பெறவில்லை. இதனால் அவரை மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
ஏனென்றால் ஒருநாள் அணிக்கான விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்ததால், உலகக்கோப்பைத் தொடருக்கு அவரின் பங்கு மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆசியக் கோப்பையையொட்டி கம்பேக் கொடுத்தாலே போதுமானது என்று பிசிசிஐ கண்காணித்து வந்தது. அதற்கேற்க நிதானமாகவே கேஎல் ராகுலும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் கேஎல் ராகுல் இன்னும் 2 வாரத்திற்குள் பேட்டிங் பயிற்சியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பும்ராவும் பவுலிங் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், இன்னொரு பக்கம் கேஎல் ராகுல் பேட்டிங் பயிற்சியை தொடங்க உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.