ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தரப்பில் ஸ்மிருதி மந்தா - ஷஃபாலி வர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 16 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஷஃபாலி வர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து ஸ்மிருந்தி மந்தா - ஜெமீமா ரோட்ரிக்ஸ் கூட்டணி சிறப்பாக பேட்டிங் செய்தது. 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மிருதி மந்தனா 46 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் 9 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஜெமீமா ரோட்ரிக்ஸ் 40 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் இலங்கை அணிக்கு 117 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி வீராங்கனைகள் இலங்கை அணிக்கு தொடக்கம் முதலே அழுத்தம் கொடுத்தனர். இளம் வீராங்கனை டைடஸ் சாது வீசிய பந்தில் சஞ்வானி 1 ரன்களிலும், குணரத்னே டக் அவுடாகியும், கேப்டன் சமாரி அட்டப்பட்டு 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் இலங்கை அணி 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் வந்த பிரேரா மற்றும் டி சில்வா இணை சிறிது நேரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் ஹாசினி பெரேரா 25 ரன்களிலும், நிலாக்ஷி டி சில்வா 23 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீராங்கனைகளில் ரணசிங்கே மட்டும் 26 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார்.
இறுதியாக இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் சாது 3 விக்கெட்டுகளையும், ராஜேஸ்வரி ஜெய்க்வாட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலமாக இந்திய மகளிர் அணி ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளது. ஆசிய போட்டிகளில் முதல்முறையாக களமிறங்கிய இந்திய மகளிர் அணி, தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு 2வது தங்கம் கிடைத்துள்ளது.