
முக்கிய வெற்றிகளுக்கு காரணமானவர்
ராணி ராம்பால் இந்திய மகளிர் அணிக்கு முக்கியமான வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர். 2017ல் நடந்த மகளிர் ஆசியா கோப்பைப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. அதேபோல 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 2019 சர்வதேச ஹாக்கி சங்க ஒலிம்பிக் குவாலிபயர் போட்டியில் இந்தியாவை வெற்றி பெற வைத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற ராணி ராம்பால் போட்ட கோல் உதவியது.

ராணி ராம்பால் பரிந்துரை
மேலும் சர்வதேச மகளிர் ஹாக்கி சம்மேளனத்தின் உலக தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் அணி 9வது இடத்தைப் பிடித்து புதிய சாதனையும் படைத்தது. எல்லாப் புகழும் ராணி ராம்பாலின் தலைமைக்கே போய்ச் சேர வேண்டும். இதனால்தான் அவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விளையாட்டு உலகின் பாரத ரத்னா விருதாக இந்த கேல் ரத்னா மதிக்கப்படுவது நினைவிருக்கலாம்.

அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை
இந்திய வீராங்கனை வந்தனா 200 சர்வதேச ஹாக்கி போட்டிகளில் பங்கேற்ற அனுபவஸ்தர். மோனிகா 150 போட்டிகளில் ஆடியுள்ளார். இருவருக்கும் அர்ஜூனா விருது கிடைக்கவுள்ளது. இருவருமே 2019 குவாலிபயர் போட்டியில் முக்கிய ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள் ஆவர். ரசிகர்களுக்கும் விருப்பமான போட்டிகளை தந்தவர்கள் இவர்கள்.

ராணி ராம்பால் பெறுவாரா?
ஹாக்கி விளையாட்டிலிருந்து கடைசியாக சர்தார் சிங்தான் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றிருந்தார். அவருக்குப் பிறகு யாரும் அதைப் பெறவில்லை. அந்த இடைவெளியை தற்போது ராணி ராம்பால் நிரப்புவாரா என்பதைப் பார்க்க வேண்டும். ஆகஸ்ட் 29ம் தேதி விருது வழங்கும் விழா திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications