
நியூசிலாந்தில் நடைபெறுகிறது
நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் உலக கோப்பை தொடரில் இந்தியா 4வது அணியாக உள் நுழைந்துள்ளது. பாகிஸ்தானுடன் நடைபெறவிருந்த தொடருக்கு அரசு சார்பில் அனுமதி கிடைக்காத நிலையில், புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு, நேரிடையாக தற்போது இந்திய மகளிர் உலக கோப்பை தொடருக்கு தேர்வாகியுள்ளனர்.

5 அணிகள் தேர்வு
உலக கோப்பை 2021 தொடருக்கு தேர்வாகியுள்ள அணிகளில் ஆஸ்திரேலியா 37 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து இங்கிலாந்து 29 புள்ளிகளுடனும் தென்னாப்பிரிக்கா 25 புள்ளிகளுடனும் தேர்வாகியுள்ள நிலையில், தற்போது இந்தியா 23 புள்ளிகளுடன் உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. தொடரை நடத்தவுள்ள நியூசிலாந்து அணியும் நேரிடையாக பங்கேற்கவுள்ளது.

தொடர்கள் ரத்து
இதனிடையே, சர்வதேச அளவில் வேகமாக பரவி லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக உலக கோப்பை தொடரின் 2 தகுதி சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கடந்த ஜூலை முதல் நவம்பர் வரை திட்டமிடப்பட்டிருந்த ஒருநாள் சாம்பியன்ஷிப் சுற்றும் மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் பகிரப்பட்டுள்ளன.

அடுத்த இடத்தில் பாகிஸ்தான்
இதனிடையே, புள்ளிகள் அடிப்படையில் இந்திய மகளிர் அணி, உலக கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான தகுதி சுற்று போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அவையும் ரத்து செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











